பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணி
150க்கும் மேற்றபட்ட படங்களில் நடித்த சுதா ராணியை தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக அறியமாட்டார்கள். காரணம் அவர் தமிழில் ஒரு சில படங்களில்தான் நடித்தார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட நடிகைகள் தமிழில் சாதித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் தாக்குப்பிடிக்க முடியாமல் கன்னடத்திற்கே திரும்பி சென்றவர் சுதா ராணி.
குழந்தை நட்சத்திரமாக, 'கில்லாடி கிட்டு' (1978) என்ற படத்தில் அறிமுமான சுதா ராணி அதன்பிறகு, 'குல்லா குல்லி' (1980), 'அனுபமா' (1981), 'பாக்யவந்தா' மற்றும் 'ரங்கநாயகி' (1981) ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது 13-வது வயதில், 'ஆனந்த்' (1986) திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகமானார். 'பஞ்சம வேதா' (1990) மற்றும் 'மைசூர் மல்லிகை' (1992) ஆகிய படங்களில் இவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புக்காக, பிலிம்பேர் விருதுகளையும் கர்நாடக மாநிலத் திரைப்பட விருதுகளையும் தலா இரண்டு முறை வென்றுள்ளார்.
தமிழில் 'அன்னக்கிளி சொன்ன கதை' என்ற படத்தில் சத்யராஜின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு வசந்தகால பறவை, வசந்த கால மலர்கள், மவுனமொழி, சுகமான சுமைகள், தங்க கிளி, படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் கன்னடத்திற்கே சென்ற அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார்.