அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சல்மான்கானின் 'மாத்ருபூமி'
இந்தியா, சீனாவுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை அடிப்படையாகக் கொண்ட கதையில் சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி உள்ள படம் 'பேட்டில் ஆப் கல்வான்'. அபூர்வா இலக்கியா இயக்கும் இந்த படத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பார்வையிட்டு படத்தில் கற்பனையாக இணைக்கப்பட்ட காட்சிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
குறிப்பாக இந்த படத்தினால் இந்தியா - சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள். அதனால் இப்படத்தின் 40 சதவீத காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் புதிதாக காட்சிகளை இணைத்து படமாக்கினார்கள். காதல் மற்றும் அதன் பின்னணி காட்சிகளை அதிகமாக இணைத்தார்கள். மேலும் இப்படத்தின் தலைப்பு கூட 'பேட்டில் ஆப் கல்வான்' என்பதிலிருந்து 'மாத்ருபூமி' என்று மாற்றினார்கள்.
என்றாலும் இந்த படத்தில் மேலும் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதோடு, திட்டமிட்டபடி இந்த படம் மே மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்றும் பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம், இந்த படத்தை மீண்டும் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் பார்வையிட உள்ளார்களாம். அப்போது அதிருப்திகரமான காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்குமாறு அவர்கள் உத்தரவு போடுவார்கள் என்பதினால் ஒருவேளை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், மாத்ருபூமி படத்தின் ரிலீஸ் மே மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.