உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயின் 'டூப்' வைத்து பிரசாரம் செய்யும் த.வெ.க வேட்பாளர்கள்: சேரன் விமர்சனம்

விஜயின் 'டூப்' வைத்து பிரசாரம் செய்யும் த.வெ.க வேட்பாளர்கள்: சேரன் விமர்சனம்


நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், கட்சி துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல் என எதிலும் போட்டியிடாமல், தங்களுடைய இலக்கு, 2026 சட்டசபை தேர்தல் தான், எனக்கூறி வந்தனர். அதேபோல், புதுச்சேரியில் நாளை (ஏப்.9), தமிழகத்தில் ஏப்.23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக விஜய் தரப்பில் வாய்மொழி அறிவிப்பாகவே வாக்குறுதிகள் சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கை என தனியாக த.வெ.க கட்சியின் விஜய் இதுவரை வெளியிடவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், விஜய் அனைத்து தொகுதியிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள், புதுச்சேரியில் ஓரிரு இடங்கள், சென்னையில் ஓரிரு இடங்கள் என அவரது பிரசாரம் சிறிய வட்டத்திற்குள் சுருங்கியது. இன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய இருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 3, 4 மாவட்டத்திற்கு மட்டுமே அவரது சுற்றுப்பயணம் இருக்கிறது. மற்ற மாவட்டங்கள், அங்குள்ள தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் வருவாரா என அக்கட்சி வேட்பாளர்களுக்கே தெரியாது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், விஜய் நமக்காக பிரசாரம் செய்ய வரமாட்டார் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவரை வைத்து ஓட்டு வாங்க வேறு வழித்தெரியவில்லை என்பதுபோல, விஜய் போன்ற 'டூப்' பொம்மையை உருவாக்கி, பிரசார வேனில் நிற்க வைத்து அதனுடன் நின்று பிரசாரம் செய்கின்றனர். சிலர் விஜய் போன்ற தோற்றத்தில் ஒருவரை அவரை போலவே மேக்கப் போட்டு கூட்டிவந்து 'டூப்' விஜய் போல நிற்க வைத்து பிரசாரம் செய்கின்றனர். இதெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது மட்டுமல்லாமல், கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் 'டூப்' விஜய் வைத்து பிரசாரம் மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்து இயக்குனரும், நடிகருமான சேரன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சேரன் வெளியிட்ட பதிவில், ''ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.. இந்த பரப்புரை (பிரசாரம்) நிலை சரிதானா.. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா... அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப், வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு... நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்...

நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக, கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார் ஒருவர் (சீமான்). அந்த தலைவன் எங்கே... முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே... நீங்கள், யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசாரம் செய்கிறார்.. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள்... இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தானே...'' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !