PUBLISHED ON : ஜன 11, 2026

சிகரெட்டை 'மயானக்குச்சி' என்று கூறலாம். உலகளவில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர். இதில் 5 லட்சம் பேர் புகைப்பிடிக்காமல், புகைப்பிடிப்பவர்களால் பாதிக்கப்படும் 'பாசிவ் ஸ்மோக்கிங்' எனப்படுபவர்கள். உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளும் புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படுகிறது. மொத்த ஆயுளில் பத்தாண்டுகள் குறைகிறது.
இந்தியாவின் நிலை இந்தியாவில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பிடித்தல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை எப்படி சிகரெட் பிடிக்கின்றனர் என்பதைப் பொறுத்து அதனால் வரும் விளைவுகளும் ஏற்படுகின்றன.
ஒருவர் ஒரு முறை புகைப்பிடிக்கும் போது அவர் விடும் புகையில் 7000க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் வெளியாகின்றன. அந்த புகையின் நச்சுப்பொருட்களில் உள்ள 70 வேதிப்பொருட்கள் புற்று நோயை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து சிகரெட் புகை எவ்வளவு அபாயகரமானது என்று அறியலாம்.
புகையும் நோயும் புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய், தொண்டை, சிறுநீரக, கணைய புற்றுநோய்கள், இதயநோய், பக்கவாதம், சி.ஓ.பி.ஏ., எனப்படும் நாள்பட்ட நுரையீரல் தொடர்பான நோய், சர்க்கரை நோய், எலும்பு அடர்த்தி குறைவு நோய் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது. கண்புரை, பார்வையிழப்பு ஏற்படலாம். பெண்களுக்கு கருச்சிதைவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
உடலிலுள்ள அனைத்து தமனிகளும் சுருங்கி கால்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புகைப்பிடிப்பதால் மாரடைப்பு வரும் போது காப்பாற்றுவது கடினம். புகைப்பிடிப்பவரால் சிறுகுழந்தைகளும், மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை 'பாசிவ் ஸ்மோக்கிங்' என்போம். அதனால் தான், மயானத்திற்கு வழிநடத்திச் செல்கிறது சிகரெட் என்கிறோம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு எத்தனையோ சிகிச்சைகள் உள்ளன. இந்த பழக்கத்தை விட்டால் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
புகைப்பிடித்தால் அந்த பழக்கத்தை உடனே விடுங்கள். புதிதாக புகைப்பிடிக்காதீர்கள், புகைப்பிடிப்பவர் பக்கத்தில் போகாதீர்கள், கணவனாக இருந்தாலும்!
- டாக்டர் ஜெ. சங்குமணி மருத்துவ கல்வி இயக்குநர் (ஓய்வு) மதுரை

