ADDED : பிப் 27, 2026 05:24 AM

- நமது நிருபர் -
கம்பாலா என்பது கடலோர பகுதிகளின் பாரம்பரிய விளையாட்டு. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கம்பாலாவை காண, வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். கடந்த, 33 ஆண்டுகளாக கம்பாலா நடந்து வந்த இடம், தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளின் பிரசித்தி பெற்ற விளையாட்டு கம்பாலா. சேற்றில் இரட்டை எருமைகள் இடையே நடக்கும் ஓட்ட பந்தயமே கம்பாலா எனப்படுகிறது. இதற்கு முன் கடலோர மாவட்டங்களில் நடந்தது. தற்போது கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. பெங்களூரிலும் நடக்கிறது.
தட்சிணகன்னட மாவட்டம், புத்துாரின் மஹாலிங்கேஸ்வரா கோவில் அருகே, பல ஆண்டுகளாக கம்பாலா நடந்து வந்தது. சரியான வசதிகள் இல்லாத காரணத்தால், போட்டிகள் நிறுத்தப்பட்டன. 1992ல் அன்றைய எம்.எல்.ஏ., வினய்குமார் சொரகே மற்றும் இளம் தொழிலதிபர் ஜெயந்த் ராய் இணைந்து, கம்பாலா நடக்கும் இடத்தை சீரமைத்தனர். பின், இங்கு, 33 ஆண்டுகள் கம்பாலா நடந்தது.
தற்போது வினய்குமார் சொரகேவுக்கு நெருக்கமான சந்திரஹாச ஷெட்டி, கம்பாலா கமிட்டி தலைவராக இருக்கிறார். சொரகே கவுரவ தலைவராக இருக்கிறார்.
இவர்கள் கம்பாலா நடக்கும் பகுதியை, வேறு இடத்துக்கு மாற்ற திட்டம் வகுத்துள்ளனர்.
கம்பாலா நடக்கும் பகுதி, மஹாலிங்கேஸ்வரா கோவிலின் ரத வீதி அருகிலேயே உள்ளது. திருவிழா நடக்கும் போது, பிரச்னை ஏற்படுகிறது. கோவிலின், 18 ஏக்கர் நிலத்தில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. எனவே கம்பாலா நடக்கும் பகுதியை, வேறு இடத்துக்கு மாற்றுகின்றனர். படிப்படியாக பணிகள் நடக்கும் வரும், 2027ல் புதிய இடத்தில் கம்பாலா நடக்கும்.

