பனி சறுக்கு விளையாட்டு போட்டியில் ஜியா ஆர்யனுக்கு 2 வெண்கல பதக்கம்
பனி சறுக்கு விளையாட்டு போட்டியில் ஜியா ஆர்யனுக்கு 2 வெண்கல பதக்கம்
ADDED : பிப் 27, 2026 05:23 AM

- நமது நிருபர் -
ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் விளையாட்டு போட்டியில், பனி சறுக்கில், கர்நாடகாவின் ஜியா ஆர்யன் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள், 2026 கடந்த, 23ம் தேதி துவங்கின. இதில், பனிசறுக்கு விளையாட்டு பிரிவில், 23ம் தேதி நடந்த போட்டியில் ஸ்லாலோம் பிரிவிலும், 24ம் தேதி போட்டியில் ஜெயண்ட் ஸ்லாலோம் பிரிவிலும், கர்நாடகாவின் பெண் வீராங்கனை ஜியா ஆர்யன், 17, இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார். தொடர்ந்து அங்கு நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
ஜியா ஆர்யன் கூறியதாவது:
தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்றது எனக்கு ஏமாற்றம் தான். இரண்டு பதக்கங்களும் ஒரே நிறத்தில் இருப்பது வருத்தமாக உள்ளது. வெண்கலத்தில் இருந்து வெள்ளி அல்லது தங்க பதக்கம் வெல்ல ஆசைப்படுகிறேன்.
இரண்டாவது போட்டியில், முதல் பாதியில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன். இரண்டாவது பாதியில் சில சறுக்கல்களை சந்தித்தேன். தவறில் இருந்து மீண்டு வந்தேன். வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்பிக்கை உள்ளது.
போட்டி நடந்த இடத்தில், பனியின் நிலைமை மாறிக்கொண்டே இருந்தது. இதனால், வீரர், வீராங்கனையர் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இங்கு வலுவான போட்டியாளர்களுடன் இணைந்து செயல்படுவது புதிய அனுபவத்தை கொடுத்து உள்ளது. காஷ்மீர் எனக்கு 2வது வீடு போன்ற அனுபவத்தை கொடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

