ADDED : பிப் 27, 2026 05:26 AM

- நமது நிருபர் -:
பி.சி.சி.ஐ., என்ற, இந்திய கிரிக்கெட் வாரியம், 'வைசி' கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு, கோவா கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. மார்ச் 1ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, கோவாவின் பன்ஜிம் ஜிம்கானா மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.
இப்போட்டியில், தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என, நான்கு பிரிவு அணிகள் மோதும். நாட்டில் வளர்ந்து வரும், பல்கலை கழக அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான, மிக முக்கியமான தளமாக, 'வைசி போட்டி' கருதப்படுகிறது.
இதில், தெற்கு பிரிவில், மைசூரு ஜே.பி., நகரில் வசிக்கும் ஷியாம் சுந்தர் ஹெக்டே - சுபா ஹெக்டே தம்பதியின் மகன் சமர்த் ஹெக்டே தேர்வாகி உள்ளார். மைசூரு வித்யாவர்த்கா பொறியியல் கல்லுாரியில், இவர் முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
சமீபத்தில் ஜே.எஸ்.எஸ்., அறிவியல், தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் நடந்த தென்மண்டல பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், மூன்று இன்னிங்சில், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, 96 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
சமர்த் ஹெக்டே கூறுகையில், ''வைசி போட்டியில், தெற்கு பிரிவில் தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக சர்வதேச விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதே என் இலக்கு. இதை நோக்கியே என் பயணத்தை தொடர்கிறேன்,'' என்றார்.

