பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா அறிவிப்பு
பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா அறிவிப்பு
ADDED : ஆக 12, 2025 10:03 AM

வாஷிங்டன்: பலுசிஸ்தான் விடுதலை படை, மஜீத் படைபிரிவை பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
2024ம் ஆண்டு பாகிஸ்மான் கராச்சி விமான நிலையம், குவெட்டா ஆகிய இடங்களில் பலுசிஸ்தான் விடுதலை படை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இது தவிர குறிப்பிட்ட இடைவெளியில் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வருகிறது.
இந் நிலையில் தொடர் வன்முறை தாக்குதல்களை அடுத்து, பலுசிஸ்தான் விடுதலை படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை செய்திக்குறிப்பு மூலம் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
பலுசிஸ்தான் விடுதலை படையின் வன்முறை நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தும் வருகின்றன.
வெளியுறவுத்துறையின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆதரவை குறைப்பதற்கு இதுவே ஒரு சிறந்த வழி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை அமெரிக்கா சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.