மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவர் சென்னையில் கைது
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவர் சென்னையில் கைது
UPDATED : ஆக 12, 2025 10:35 PM
ADDED : ஆக 12, 2025 03:37 PM

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அரசியல் ரீதியான புயல்
மேலும், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரிக்கிறது.
இம்முறைகேட்டில் கைதான சொத்து வரி குழுத்தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, தி.மு.க., கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க., பாஸ்கரன் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டுள்ளது அரசியல் ரீதியான புயலை கிளப்பியுள்ளது.
கைது
இந்நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக, மதுரை அழைத்து சென்றனர்.
உதவி கமிஷனர் கைது
தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முறைகேடு நடந்த காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து வருகின்றனர்.
சொத்து வரி குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் என்பவர் அளித்த போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.