UPDATED : ஆக 12, 2025 03:55 PM
ADDED : ஆக 12, 2025 03:45 PM

புதுடில்லி: ஏர் இந்தியா மீது புகார் தெரிவித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எம்.பி.,க்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.
திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டில்லி புறப்பட்டனர். அப்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த நிலையில், விமானம் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.
விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த எம்பிக்கள் உள்ளிட்ட பயணிகள் பீதியடைந்தனர். இது தொடர்பாக கேரள எம்பிக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனை ஏர் இந்தியா மறுத்துஇருந்தது.
இந்நிலையில், எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில் ஏர் இந்தியா மீது உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளனர்.