இந்திய குடியுரிமையை ஆதார் உறுதிப்படுத்தாது: மும்பை ஐகோர்ட்
இந்திய குடியுரிமையை ஆதார் உறுதிப்படுத்தாது: மும்பை ஐகோர்ட்
ADDED : ஆக 12, 2025 04:26 PM

மும்பை: ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகனாக ஆகிவிடமாட்டார் என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜாமின் மறுத்து தெரிவித்தபோது இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் போலி ஆவணங்களுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக, சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் இன்று நீதிபதி அமித் போர்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி அமித் போர்கர் கூறியதாவது:
செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்று கூறப்படும் பாபு அப்துல் ரூப் சர்தார், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் ஐடி மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற போலி இந்திய ஆவணங்களை வாங்கி உள்ளார்.
1955ம் ஆண்டில், குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது குடியுரிமையைப் பெறுவதற்கான நிரந்தர மற்றும் முழுமையான அமைப்பை உருவாக்கியது.
'எனது கருத்துப்படி, 1955ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் இன்று இந்தியாவில் குடியுரிமை குறித்த கேள்விகளைத் தீர்மானிப்பதற்கான முக்கிய மற்றும் கட்டுப்படுத்தும் சட்டமாகும். யார் குடிமகனாக இருக்கலாம், எப்படி குடியுரிமையைப் பெறலாம், எந்த சூழ்நிலைகளில் அதை இழக்கலாம் என்பதை வகுக்கும் சட்டம் இது,
ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக மாற்றாது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண அல்லது சேவைகளைப் பெறுவதற்காகவே.
ஆனால் குடியுரிமைச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி குடியுரிமைக்கான அடிப்படை சட்டத் தேவைகளை அவை மீறுவதில்லை.
சட்டப்பூர்வ குடிமக்களுக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே சட்டம் ஒரு தெளிவான கோட்டை வரைகிறது.
சட்டவிரோத குடியேறிகள் பிரிவில் வரும் மக்கள் குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான சட்டப்பூர்வ வழிகளில் குடியுரிமை பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில் இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது மற்றும் குடிமக்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகள், இந்தியாவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாதவர்களால் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது,
குற்றம்சாட்டப்பட்டவரின் ஆவணங்கள் இன்னும் சரிபார்ப்பு நடந்து வருவதாகவும், விசாரணை இன்னும் தொடர்வதாகவும், ஜாமின் வழங்கப்பட்டால் அவர் தலைமறைவாகக்கூடும் என்ற காவல்துறையின் அச்சம் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார்.
எனவே ஜாமின் கோரிக்கை மனு நிராகரிக்கப்படுகிறது. கேரள ஐகோர்ட் சமீபத்தில் அளித்த ஒரு தீர்ப்பில், ஆதார் அட்டை, பான்கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருப்பது மட்டும் ஒருவருக்கு இந்திய குடியுரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தாது என்று கூறியுள்ளது. இந்த ஆவணங்கள் அடையாளம் அல்லது குடியிருப்பு சான்றுகள் மட்டுமே, ஆனால் அவை குடியுரிமைக்கான தீர்மானகரமான ஆதாரம் அல்ல. இவ்வாறு நீதிபதி அமித் போர்கர் கூறினார்.