/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்களை பதம் பார்க்கும் பறவைக்கூட்டம் இளம் நெற்பயிர்கள் காலில் மிதிபட்டு மடியும் கொடுமை
/
பயிர்களை பதம் பார்க்கும் பறவைக்கூட்டம் இளம் நெற்பயிர்கள் காலில் மிதிபட்டு மடியும் கொடுமை
பயிர்களை பதம் பார்க்கும் பறவைக்கூட்டம் இளம் நெற்பயிர்கள் காலில் மிதிபட்டு மடியும் கொடுமை
பயிர்களை பதம் பார்க்கும் பறவைக்கூட்டம் இளம் நெற்பயிர்கள் காலில் மிதிபட்டு மடியும் கொடுமை
ADDED : டிச 24, 2025 06:37 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் இருபோக சாகுபடி பகுதியில் 2வது போகத்திற்காக நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ள நெல் விவசாயிகளின் வயல்களில் புழு, பூச்சிகளை உண்ணவரும் பறவைகளின் கால்களில் இளம்நெற்பயிர்கள் மடிந்து இறக்கின்றன.
தேனுார், தோடனேரி, சித்தாலங்குடி, குலமங்கலம், வடுகப்பட்டி, கள்ளந்திரி பகுதிகளில் இரண்டாம் போக சாகுபடி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாற்று நடவுக்கு வழியின்றி நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 10 முதல் 14 நாட்களான இளம்பயிர்கள், பறவைகளால் சேதமடைவதாக குலமங்கலம் விவசாயி திருப்பதி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நவம்பரில் பயிர் செய்யக்கூடாது. பனியில் பயிரின் வளர்ச்சி குறைந்து விடும். ஆனால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத நிலையில் முதல்போகமே தாமதமாக அறுவடை செய்தோம். இரண்டாம் போகத்திற்கும் அதே பிரச்னை என்பதால் நாற்று உற்பத்திக்கு நேரமில்லை.
எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்தபின்பே நிலத்தை உழுது தயார் செய்ய முடிந்தது. நேரடியாக நெல் விதைத்து ஒரு மாதமான நிலையில் பனியால், பயிர் குறுகி வளர்ச்சியின்றி உள்ளது.
இந்நிலையில் வயலில் தேங்கியுள்ள புழு, பூச்சி, நத்தைகளை உண்ண பறவைகள் கூட்டமாக வருகின்றன. நாரை, கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் புரட்டாசி, ஐப்பசியில் தான் அதிகமாக வரும். தை மாதம் வரை வயல்களில் வேட்டையாடும். இவற்றின் கால்பகுதி வாத்தின் கால்பகுதி போன்று தட்டையான ஜவ்வால் ஆனதால் வயலில் அமரும் போது இளம்நெற்பயிர்கள் காலின் அடியில் சிக்கி மடிகின்றன. சணல் கயிற்றில் வெடி வைத்தும் சேலையை வேலியாக அமைத்தும் பறவைகளை விரட்ட முடியவில்லை.
தவிர இலைப்பேன் தாக்குதலால் பயிரில் நுனிக்கருகல் ஏற்பட்டுள்ளது. தைமாதம் காப்புக்கட்டி கதிர் அறுக்கும் நாள். கதிர் வந்து பால் பிடிக்க வேண்டிய பருவத்தில் பயிர்கள் வளர்ச்சி குன்றியும் பறவைகளால் சேதம் ஏற்பட்டு மகசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அரசுக்கு தெரிவித்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

