/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடுமேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
/
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடுமேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடுமேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடுமேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : செப் 17, 2025 07:28 AM
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்கில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
இவ்வழக்கில் 23 பேர் கைதாகினர். இவர்களில் உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மாநகராட்சி வரிவிதிப்புக்குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட 14 பேருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது.
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்த சுரேஷ்குமார் (இடமாறுதலில் துாத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்தார்) ஜாமின் மனுவை மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொன்வசந்த் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் மாநகராட்சி ஊழியர் அல்ல. வரி வசூலில் எனக்கு தொடர்பு இல்லை. இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது. சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
காளவாசலிலுள்ள ஒரு கட்டடத்திற்கு வரியை குறைக்க நான் காரணமாக இருந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
தற்போது அக்கட்டட உரிமையாளர் நிர்ணயிக்கப்பட்ட வரி முழுவதும் செலுத்திவிட்டார். என்னால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை.
எனக்கு எதிராக ஆதாரம், ஆவணத்தை போலீசார் கைப்பற்றவில்லை. கைதாகி 35 நாட்களாகிறது. தவறான உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார்: காளவாசலில் உள்ள ஒரு வணிக கட்டடத்திற்கு ரூ.96 லட்சம் வரி விதித்திருக்க வேண்டும். வரியே இல்லாமல் செய்ய மனுதாரர் உதவியுள்ளார். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மனுதாரர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துள்ளார். கைதான மற்றவர்களுக்கும், மனுதாரருக்கும் வேறுபாடு உள்ளது.
குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை நடக்கிறது. ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும். விசாரணையை பாதிக்கும் என்றார்.
பொன்வசந்த் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதுபோல் ரவிச்சந்திரன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவரது தரப்பு வழக்கறிஞர் பார்த்தசாரதி,'கைதாகி 45 நாட்களாகிறது.
ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என்றார்.
நீதிபதி ஜாமின் அனுமதித்தார்.