ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்
ராகுலின் 'ஓட்டு திருட்டு' வீடியோ போலி; ஆதாரத்துடன் முகத்தில் கரி பூசியது தேர்தல் கமிஷன்
UPDATED : ஆக 21, 2025 10:07 AM
ADDED : ஆக 21, 2025 03:54 AM

புதுடில்லி: பீஹாரில் மிகப் பெரிய அளவில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, ராகுல் பகிர்ந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், உண்மை என்னவென்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்தோர் என, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சூழலில், பீஹாரில், 'ஓட்டுரிமை யாத்திரை' நடத்தி வரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மிகப் பெரிய அளவில் ஓட்டு திருட்டு நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
அதற்கு ஆதாரமாக பீஹாரை சேர்ந்த வாக்காளர் சுபோத் குமார் என்பவரது வீடியோவையும் ராகுல் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டதாக சுபோத் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ராகுல் பகிர்ந்த வீடியோ குறித்து பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை:
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக சுபோத் குமார் கூறியதில் உண்மை இல்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்குப் பின், சுபோத் குமார் குடும்பத்தினரின் பெயர்கள் நவாடா மாவட்டத்தின் 9ம் எண் ஓட்டுச்சாவடியில் இருந்து 10ம் எண் ஓட்டுச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், சுபோத்குமாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இதுவரை பதிவு செய்யப்படவே இல்லை.
மேலும், பெயர் நீக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை. ஓட்டுச்சாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பூத்தில் சுபோத் குமாரும் இருந்தார். ஓட்டுச்சாவடிக்கு வந்ததற்கு சான்றாக வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் படம் பிடிக்கப்பட்ட போட்டோவிலும் சுபோத் குமார் இடம்பெற்றுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது குறித்து பூத் அளவிலான அதிகாரிகள் கேட்டபோது, பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தையும் அவர் நிரப்பி தாக்கல் செய்யவில்லை.
தவிர, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும், பெயர் இல்லாதது குறித்து சுபோத் குமார் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
எனவே, சுபோத் குமார் எழுப்பிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. படிவம் - 6 நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை அவர் சமர்பித்தால், வாக்காளர் பட்டியலில் சுபோத் குமாரின் பெயர் சேர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.