ADDED : செப் 17, 2026 03:18 AM

மாண்டியா: கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்ட மாண்டியாவின் மத்துார் பகுதியில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நேற்று நடந்தது.
மாண்டியா மாவட்டம், மத்துாரில் உள்ள ஜாமியா மசூதிக்கு முன், கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் சென்ற போது, மசூதியில் இருந்து சிலர், விநாயகர் சிலை மீது கல்வீசினர். இச்சம்பவம் வன்முறையாக வெடித்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை கண்டித்து, மத்துார் ஜாமியா மசூதிக்கு முன் நேற்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., -- எம்.எல்.சி., - சி.டி.ரவி, ஹிந்து அமைப்பினர், பக்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, பாதுகாப்பு பணியில் கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் என 600க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். 30 கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஊர்வலம் மசூதிக்கு முன் வந்த போது சிலர் பட்டாசுகளை வெடித்தனர். கோஷங்கள் எழுப்பினர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாண்டியா மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேசி சமாதானம் செய்தார். பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது பதற்றம் உருவானது. பின், விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
