ADDED : செப் 17, 2026 03:17 AM
பெங்களூரு: காவிரி தாயை போற்றும் வகையில், அக்டோபரில் 17ம் தேதி காவிரி தீர்த்த உத்சவம் கொண்டாடப்பட உள்ளது.
கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையின் நீர் ஆதாரமாக குடகின் பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரி உள்ளது.
காவிரி தாயை போற்றி நன்றி செலுத்தும் வகையில், ஆண்டிற்கு ஒரு முறை தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
குறிப்பிட்ட சுப முகூர்த்த நேரத்தில், பிரம்ம குகையில் இருந்து தீர்த்த நீர் பொங்கி எழும்பும். காவிரி அன்னை தங்களுக்கு நீர் வடிவில் காட்சி அளிப்பதாக, பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.
கொடவா சமூக மக்களின் குடும்ப தெய்வமாக காவிரி அன்னை இருப்பதால், குகையில் இருந்து பெறப்படும் புனித நீரை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று பத்திரமாக வைக்கின்றனர்.
இத்தனை புகழ்பெற்ற காவிரி தீர்த்த உத்சவம், இந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7:50 மணிக்கு மேஷ லக்னத்தில் தீர்த்த உத்சவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் இரண்டு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
