வாசகர்கள் கருத்துகள் (1)
ஆக மொத்தம் ஊசி போன கேசரி ஆ யாரு சாப்பிடுவாங்க
தயாரிப்பு : கேவிஎன் புர டக் ஷன்ஸ்
இயக்கம் : எச்.வினோத்
நடிப்பு : விஜய், பாபிதியோல், பிரகாஷ்ராஜ், மமிதாபைஜூ, பூஜா ஹெக்டே
ஒளிப்பதிவு : சத்யன் சூரியன்
இசை : அனிருத்
வெளியான தேதி : ஜூலை 23, 2026
நேரம் : 3 மணிநேரம் 03 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
மதுரை சிறையில் கைதியாக இருக்கும் விஜய், வெளியே வந்தபின் சிறை அதிகாரி கவுதம் மேனன் மகள் மமிதா பைஜூவை சித்தப்பா ஸ்தானத்தில் வளர்க்கிறார். அவரை கொல்ல வில்லன் பாபி தியோல் கும்பல் துரத்த, விஜய் என்ன செய்கிறார்? இந்தியாவை அழிக்க நினைக்கும் பாபி தியோல் யார்? அவருக்கும் விஜய்க்கும் என்ன முன்பகை? வில்லன் கும்பலின் திட்டத்தை தகர்த்து, தமிழகத்தை மதக்கலவரத்தில் இருந்து விஜய் பாதுகாத்தாரா? என்பது ஜனநாயகன் படக்கதை.
ஹீரோவாக விஜய் மாஸ் காண்பித்து இருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசிவரை ஆக் ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். படத்தை பெரும்பகுதி ஆக்கிரமித்து இருப்பது துரத்தல், சண்டை காட்சிகள்தான். அதில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ‛தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு' பாடல்களில் செம ஆட்டம்போட்டு விசில் பறக்க விடுகிறார். அதெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட மூவ்மென்ட். பல இடங்களில் மகள் பாசத்தை காண்பித்து இருக்கிறார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே இருந்தாலும் அவருடன் காதல், டூயட் இதெல்லாம் இல்லை. ஆகவே மற்ற படங்களை போல கலர்புல் காட்சிகள் இல்லை.
குறிப்பாக, நடிப்பில், எமோஷனல் காட்சிகளில் பல இடங்களில் தனது முத்திரை பதித்து இருக்கிறார். அதிக பன்ச் டயலாக் இல்லை என்றாலும், அவர் கேரக்டரில் படம் முழுக்க ஹீரோயிசம் தெறிக்கிறது. கடைசி படம் என்பதாலும், அரசியல்வாதியாக இருந்தபோது நடித்த படம் என்பதாலும் படத்தில் மக்கள் மீது அக்கறைப்படுகிற, மக்களுக்காக கேள்விக்கேட்கிற பல சீன்கள் இருக்கிறது. குறிப்பாக, படத்தின் பெரிய பிளஸ் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான தாக்குதல், பாலியல் அத்துமீறலுக்கு அவர் கொடுத்து இருக்கும் வாய்ஸ், அதற்காக சமூக அக்கறையுடன் சீன் வைத்திருக்கும் இயக்குனரையும் பாராட்டலாம்.
ஒரு பள்ளிக்கூட விழாவில் நுழைந்து குழந்தைகளுக்கு பேட் டச் குறித்து, விஜய் எடுக்கும் பாடங்கள், அப்படி நடந்தால் அம்மாவிடம் சொல்ல வேண்டும், யார் அதை செய்தாலும் சொல்ல வேண்டும் என்று பேசுகிற இடங்கள், எந்த படத்திலும் இதுவரை இல்லாதது. சூப்பர் சாரே. ஆங்காங்கே ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்ற பில்டப், ஹீரோயிச சீன்களிலும் நடித்து இருக்கிறார். அந்த எம்ஜிஆர் டச்சிங் ரசிக்க வைக்கிறது. பெண்கள் ஓட்டுகளை கவர கண்ணகி சிலை, பெண்கள் பிரச்னைகளை பேசி, அதில் சில அதிரடி செய்து இருக்கிறார்.
படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள். அதில் நுாற்றுக்கணக்கானவர்களை கொடூரமாக கொல்கிறார். ரத்தம் தெறிக்க அடித்து துவைத்து இருக்கிறார். அதெல்லாம் அவரின் தீவிர ரசிகர்கள், வெறித்தனமான ரசிகர்களுக்கு பிடிக்கும். மற்றவர்கள் இவ்வளவு வன்முறை ஏன், இன்னும் எத்தனை பேரை கொல்வார் என கேட்கலாம். அந்த வன்முறை, சண்டைகாட்சிகள் படத்தின் மைனஸ். ரேச்சல் சம்பந்தப்பட்ட சீன்கள் பெண்களுக்கு ஆதரவு மாதிரி தெரிந்தாலும் ஓவர் டோஸ். அதை உணர்ச்சிபூர்வமாக எடுத்து இருக்கலாம்.
ஆக் ஷன் படம் என்பதால், ஆக் ஷன் காட்சிகளால் படம் நிறைந்து இருக்கிறது. பெரும்பாலான படத்தை பைட்மாஸ்டர் அனல் அரசு தான் எடுத்து இருப்பாரோ என தோன்றுகிறது. அதுவே ஒரு கட்டத்தில் போரடிக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை ஒரு சண்டைக்காட்சி, அதில் நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து சண்டைபோட்டு, கொடூரமாக செத்து போகிறார்கள். வில்லன் ஆடும் ஆட்டம், அவன் டீமும் நடத்தும் தாக்குதல், அதில் ராணுவம், போலீஸ் சாதாரணமாக செத்துபோவது ஓவர் டோஸ். என்னடா படம் இது என மென்மையான மனது உடையவர்கள் பல இடங்களில் கண்களை மூடி படம் பார்க்க வேண்டிய நிலை. ஆகவே, அனைத்து தரப்புக்கும் ஏற்ற படம் ஜனநாயகன் அல்ல.
அதேபோல், மதுரையை ஆட்டி படைக்கும் அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் அட்டகாசம், கள்ளசாராய பலி, வில்லனின் வெளிநாட்டு சதி, இந்தியாவுக்கு வந்து பின்னும் வலை என சுற்றி வளைத்து சொல்லும் கதை, பிளாஷ்பேக், கிளைமாக்ஸ் ஆகியவற்றில் லாஜிக் இல்லை. இந்த கதையில் பாலகிருஷ்ணாவை ஏற்கலாம். ஜனநாயகனில் விஜயை ஏற்க முடியவில்லை. அதிலும் இரண்டாம் பாதி இழுக்கிறது. இந்த படத்தில் ஹீரோ எத்தனை நுாறு பேரை கொன்று இருக்கிறார் என கேட்க தோன்றுகிறது. வில்லனாக வரும் பாபி தியோல் அறிமுக காட்சியில் தொடங்கி, கடைசிவரை ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அவர் கேரக்டரில் ஈர்ப்பு இல்லை, வெறுப்பே அதிகம் இருக்கிறது. அதிலும் அவர் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு காட்சி, அங்கே நடக்கும் சண்டை, இதெல்லாம் படத்துக்கு தேவை இல்லாதது. அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜ் கேரக்டரும், பெண்கள் விஷயத்தில் அவர் செய்யும் செயலும் ரொம்பவே ஓவர். பிரகாஷ்ராஜ் கூட தனது ஸ்டைலில் முத்திரை பதிக்கவில்லை. ரொம்ப கொடூரமானவராக இருக்கிறார். ஆனால் அவர் விக், அவரின் பேச்சுகள் சில அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிறது.
இவர்களை தவிர, படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் மமிதா பைஜூ. அவரின் அப்பா பாசம், நடிப்பு, கோபம், காதல், மிலிட்டரி பயிற்சியில் வேதனைப்படும் இடங்கள், சின்ன, சின்ன ரியாக்ஷன், கிளைமாக்சில் ஆளே மாறி அதிரடியாக போடும் சண்டை செம. சில சீன்களில் வந்து போகிறார் பூஜா ஹெக்டே, அவருக்கு பெரிய வாய்ப்பு இல்லை. அதேபோல், கலெக்டராக வரும் ப்ரியாமணிக்கும் கடைசி சில சீன் தவிர மற்ற இடங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை. ஹீரோ அம்மாவாக ரேவதியை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள். நாசர், சுனிலை கூட சரியாக பயன்படுத்தவில்லை. கவுதம் மேனன் சில நிமிடங்கள் வந்தாலும் மனதில் நிற்கிறார். அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், பார்த்திபன், ஸ்ரீநாத் கவுரவ வேடத்தில் வந்து டக்கென காணாமல் போகிறார்கள். கிளைமாக்சில் இயக்குனர்கள் நெல்சன், அட்லி, லோகேஷ் கனகராஜ் நிருபர்களாக வந்து விஜயிடம் கேட்கிறார்கள். அவருக்கு உருப்படியான க்ளோசப் கூட இல்லை.
பகவந்த் கேசரி பட தழுவல் என்றாலும் திரைக்கதையில் ஏகப்பட்ட குழப்பம். விஜய் தக்கப்படி மாற்றி இருக்கிறார்கள். அது மைனஸ் ஆகவே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவை அழிக்க நினைக்கும் வில்லன் பாபி தியோல், அவர் ஒரு காலத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி, அப்புறம் அவமானப்பட்டு மாறுகிறார். கடைசியில் பொம்மைக்குள் 50 லட்சம் துப்பாக்கி அனுப்பி மதகலவரத்தை துாண்டுகிறார், ரோபோ, ட்ரோன்களால் சண்டை போடுகிறார் என்பதெல்லாம் போரடிக்க வைக்கிறது. எந்த காலத்தில் இருக்கீங்க இயக்குனரே? அதிலும் கிளைமாக்ஸ் சண்டை, ஷங்கரின் ‛எந்திரன்' படத்தை பார்ப்பது மாதிரி இருக்கிறது. காவல்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் உள்ளிட்ட பலரை சிறை வைத்து மிரட்டுவது எல்லாம் பக்கா சினிமாதனம். இப்ப, சினிமா எங்கேயோ போய்விட்டது. அதேபோல், ராணுவம், போலீஸ் சாவது, மதச்சண்டை, கலவரம், அப்புறம் மனசு மாறுவது படத்தின் வீக். மதத்தை, ராணுவத்தை, இந்தியாவின் பெருமையை சரியாக காண்பிக்காமல், ஹீரோயிசத்துக்காக நாடகத்தனமாக மாற்றியிருப்பதும் படத்தை பின்னோக்கி இழுக்க வைக்கிறது.
விஜயின் அரசியல் பயணத்தை, சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பல சீன்கள் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஒரு சீனில் டார்ச்லைட் டயலாக்கை கமலை கடுமையாக கிண்டல் பண்ணியிருக்கிறார் இயக்குனர். இன்னொரு சீனில் முந்தைய ஆளுங்கட்சியை விளாசியிருக்கிறார். கடைசியில், மாற்றம் வந்தால் நல்ல ஜனநாயகம் வரும் என முடிக்கிறார். இப்போது விஜய் ஆட்சிக்கே வந்துவிட்டதால் அந்த சீன்கள் எடுபடவில்லை. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்காக கதையை ஆக் ஷனை மட்டுமே ராவாக எடுத்தது இளைஞர்களை, பெண்களை, சாதாரண ரசிகர்களை கவருமா என இயக்குனர் யோசித்து இருக்கலாம்.
அனிருத் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. சில இடங்களில், சண்டைக்காட்சியில் இரைச்சலும் அதிகம். தளபதி கச்சேரி, ஒரு பேரை வரலாறு பாடல்களும் மாஸ். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் படத்தின் நீளம் அதிகம். வன்முறை அதிகம். படம் ஒரு நிறைவை தரவில்லை. இடைவேளை ஓகே. ஆனால், கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய சீன் போர். ‛ஏ' சான்றிதழ் என்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது. ஆனாலும், விஜய் நடித்த கடைசி படம் என்பதால், என்னதான் இருக்கு என்பதற்காக பார்க்கலாம். ஆனால், அவரின் முந்தைய வெற்றி படங்கள் மாதிரி ரசிக்க அதிக விஷயங்கள் இல்லை. கமர்ஷியல், பொழுதுபோக்கும் இல்லை.
படத்தில் பிரமாண்டம் இருக்கிறது. விஜயின் முந்தைய ஹிட் படங்களில் இருந்த சக்சஸ் பார்மூலா இல்லை. மூன்று மணி நேரத்தில் படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை திணித்து, கருத்து சொல்லி, இழுத்து, பில்டப் கொடுத்து ரசிகர்களை கதற வைக்கிறார் இயக்குனர். எப்படா படம் முடியுமானு நினைத்தால் நீங்க ரசிகன். ஆஹா, ஓஹா என்றால் நீங்க விஜய் ரசிகன்
ஜனநாயகன் - ஜனங்களின் நாயகனா.... ரசிக நாயகனா...
ஆக மொத்தம் ஊசி போன கேசரி ஆ யாரு சாப்பிடுவாங்க