‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி : கமல் நிறுவனம் புகார்
நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் இன்டர்நேசனல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது ரஜினியின் தர்மன், சிவகார்த்திகேயனின் சேயோன் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்த நிறுவனம் ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக முரளி கிருஷ்ணா என்பவர் உள்ளார்.
ஜூலை 2ம் தேதி இந்த நிறுவனத்தின் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முரளியின் வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் ராஜ்கமல் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாளரின் வாட்ஸ் அப் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், அவரது புகைப்படத்தை தாங்கள் தொடர்பு கொண்ட எண்ணிற்கு வைத்தனர். அந்த தயாரிப்பாளர் பேசுவது போன்றும், உடனடியாக அவசர தேவைக்காக ரூ.38.50 லட்சம் அனுப்பி வைக்கும்படி ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கையும் அனுப்பி உள்ளனர்.
தயாரிப்பாளரின் டிபி என்றாலும் வேறு எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததால் சந்தேகம் அடைந்த முரளி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கே பேசியிருக்கிறார். அதன்பிறகே இது ‛பாஸ் ஸ்கேம்' எனும் பணம் பறிக்கும் மோசடி என தெரியவந்தது. இதையடுத்து தங்களுக்கு வந்த மெசேஜ், கால்கள் உள்ளிட்டவைகளை ஆதாரமாய் காண்பித்து சென்னை, சைபர் கிரைமில் கமல் நிறுவனத்தின் சார்பில் முரளி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
பாஸ் ஸ்கேம் என்றால் என்ன
பாஸ் ஸ்கேம் என்பது ஒரு வகை மோசடியே. அதாவது சம்பந்தப்பட்டவரின் உயரதிகாரியின் போட்டோவை வாட்ஸ் அப்பில் டிபி.,யாக வைத்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள். இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பணத்தை அனுப்பக் கூடாது. இதுபோன்று நிறைய மோசடிகள் நடந்துள்ளன. பொது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.