உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி”

பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி”


தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகர் டி ஆர் ராமச்சந்திரன். 1938ம் ஆண்டு நடிகர் பி யூ சின்னப்பா நடித்து வெளிவந்த “நந்தகுமார்” என்ற திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகமாகி, கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, துணை நடிகராக என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். துரு துரு விழிகளுடன் ஒரு பதற்றம் கலந்த அப்பாவித்தனமான நகைச்சுவை பாணியைக் கையாண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர் கதையின் நாயகனாக நடித்து, 1941ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் “சபாபதி”.

பம்மல் சம்பந்த முதலியாரின் சமூக நாடகமான இந்த “சபாபதி”யை தனது “பிரகதி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக தயாரித்து, இயக்கி வெளியிட்டிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். “சபாபதி” படப்பிடிப்பின் போது, ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் சென்று, முதலாளி சார், இப்போது நான் கதாநாயகனாக நடித்து வருகின்றேன். மாதச் சம்பளத்தை எனக்குக் கூட்டித் தரவேண்டும் என நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் கேட்க, 'ஆகட்டும்' என சொல்லியிருக்கின்றார் ஏ வி மெய்யப்ப செட்டியார். மாதம் முடிந்தது. சம்பளக் கவரும் வந்தது. வழக்கமான சம்பளத் தொகையுடன் கூடுதலாக இரண்டு ரூபாய் ஐம்பது பைசா சேர்த்து எழுபது ரூபாய் இருந்தது சம்பளக் கவரில்.

“சபாபதி” படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதங்கள்தான் நடந்தது. படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் நடிப்பிற்கு ஊதியமாக பெற்றுக் கொண்ட தொகை நூற்றி நாற்பது ரூபாய். கதாநாயகி பத்மா நடிப்பிற்காக பெற்ற ஊதியம் மாதம் ரூபாய் நாற்பத்தைந்து. டி ஆர் ராமச்சந்திரன், பத்மா, காளி என் ரத்தினம், சி டி ராஜகாந்தம், கே சாரங்கபாணி ஆகியோர் நடித்து, ஏ வி மெய்யப்ப செட்டியார் தனது “பிரகதி பிக்சர்ஸ்” மூலம் தயாரித்து இயக்கியிருந்த இந்த “சபாபதி” திரைப்படம் 1941ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !