ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா
அகாண்டா 2 படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது நடிகர் பாலகிருஷ்ணா, கோவிந்த் மாலினேனி டைரக்ஷனில் தனது 116 வது படத்தில் நடித்து வருகிறார். இடையில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார் என்று பின்னர் செய்தி வெளியானது. ஆனாலும் ரஜினி படத்தில் தான் நடிக்கவில்லையே தவிர ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் தான் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறாராம் பாலகிருஷ்ணா. ஆம் தெலுங்கில் நானி நடித்த அண்டே சுந்தராணிக்கி மற்றும் சரிபோத சனிவாரம் ஆகிய படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா அடுத்ததாக பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம்.
மும்பையை கதைக்களமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இது உருவாகிறதாம். ஆச்சரியமாக கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தபோது அவருக்கு இந்த கதை சொல்லப்பட்டது என்றும் ஆனால் தற்போது தான் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்திருப்பதால் உடனடியாக அப்படி இன்னொரு படத்தில் நடிக்க தான் விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டாராம். பிறகு தான் இந்த கதை ஒரு வழியாக பாலகிருஷ்ணாவை தேடி வந்திருக்கிறது என்கிறார்கள்.