தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ?
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையங்களில் திருட்டுத்தனமாக 'லீக்' ஆனது. யார் லீக் செய்திருப்பார்கள், என்ன காரணம் என்பது விசாரணையில் தெரிய வரும்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன், அதிலும் அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் விஜய்யின் படம் இப்படி வெளியானது இந்தியத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மொழித் திரைக் கலைஞர்களும் இதற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் இப்படி இரண்டு படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பாகவே சி.டி மூலமாகவும், இணையம் மூலமாகவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இணையதளங்கள் அதிகளவில் பிரபலமாவதற்கு முன்பாக 90களில் ராதாமோகன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்க, இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் மகன் முரளி தயாரித்த 'அனந்த கிருஷ்ணன்' என்ற படம் சி.டி.யில் திருட்டுத்தனமாக வெளியாகியது. அதன் காரணமாக படம் தியேட்டர்களுக்கு வராமலேயே போய்விட்டது.
அடுத்து 2010ம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சரத்குமார், ஸ்ரேயா நடித்த 'ஜக்குபாய்' திரைப்படம் இணையங்களில் வெளியானது. அதன் காரணமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மீண்டும் படமாக்கினார் இயக்குனர். அதன்பின் படத்தைத் தியேட்டர்களில் வெளியிட்டார்கள். ஆனாலும், வரவேற்பைப் பெறவில்லை.
இணையதளங்களில் 'பைரசி' இணையதளங்கள் வந்த பிறகு படம் வெளியான அன்றே பல படங்கள் வெளியாகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும் என்று திரையுலகினர் எவ்வளவோ கூறினாலும் அது இன்னும் தடுக்கப்படமாலேயே உள்ளது. இப்போது டெலிகிராம், வாட்சப் போன்ற தளங்கள் மூலமும் படங்களை பரப்புகின்றனர்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் படங்களை இப்படி திருட்டுத்தனமாக வெளியானாலும் உடனடியாக அவற்றை நீக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்படி வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.