உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரன்வீருக்கு 250 லுக், துரந்தருக்கு 10,000 உடைகள் : ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி சொன்ன இயக்குனர்

ரன்வீருக்கு 250 லுக், துரந்தருக்கு 10,000 உடைகள் : ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி சொன்ன இயக்குனர்

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான துரந்தர் மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இயக்குனர் ஆதித்யா தர் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான இந்த படம் பாகிஸ்தானை கதைக்களமாக கொண்டு ஒரு உளவாளி கதையாக உருவாகி இருந்தது. இதில் பிரபல நடிகர்களே நூற்றுக்கணக்கில் இடம்பெற்ற நிலையில் துணை நடிகர்கள் ஆயிரக்கணக்கில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஸ்மிருதி சவுகான் மிக நேர்த்தியாக அனைவருக்குமான ஆடைகளை வடிவமைத்திருந்தார். இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஆதித்யா தர் தனது சோசியல் மீடியா பதிவில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக ஆடை வடிவமைப்பில் உறுதுணையாக இருந்ததற்காக மிக நீண்ட பதிவுடன் தனது நன்றியை தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துரந்தர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 10,000 ஆடைகளை தைத்தது மட்டுமின்றி முதல் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 உடைகளை இரவு பகல் தூக்கம் இன்றி உருவாக்கி தந்தார். அப்போது கூட ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அணிந்திருக்கும் சட்டையின் கையில் இருக்கும் பட்டன் சரியாக இருக்க வேண்டுமே என்கிற நுணுக்கமான வேலையையும் செய்திருப்பார்.

இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்த ஹம்சா கதாபாத்திரத்திற்கு 250க்கும் மேற்பட்ட தோற்றங்களை அவர் உருவாக்கி காட்டினார். இந்த படத்திற்குள் அவர் நுழைந்தபோது அவரிடம் இப்படித்தான் டிசைன்கள் உருவாக்க வேண்டும், இந்த கதைக்களத்திற்கு இதுதான் பொருத்தமானது என்று எந்தவிதமான கருத்துத் திணிப்போடும் உள்ளே வராமல், வந்த பிறகு கதைக்கு ஏற்றபடி அவர் ஆடைகளை வடிவமைத்து கொடுத்தார்.. இந்த படத்தில் நீங்கள் எனக்கு கிடைத்தது உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான்” என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !