விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தியேட்டர்களில் வெளியாவது தள்ளிப் போய், தற்போது இணையங்களில் திருட்டுத்தனமாக 'லீக்' ஆகியுள்ளது. அதற்கு தங்களது கண்டனங்களை தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கும் நாயகி பூஜா ஹெக்டே இன்ஸ்டா தளத்தில், “என் அன்புள்ள பார்வையாளர்களே...
ஒரு படம் என்பது எண்ணற்ற மணி நேர உழைப்பு, படைப்பாற்றல் நிறைந்த அபாயங்கள், தனிப்பட்ட தியாகங்கள், மற்றும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும் நம்பிக்கையுடன் வந்து நின்ற ஒரு குழுவின் விளைவு.
எங்கள் படம் ஆன்லைனில் லீக் ஆனதைப் பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, அதில் பணியாற்றிய ஒவ்வொரு நபருக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது. அது லீக் ஆகி சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைப் பார்ப்பது கஷ்டமாக உள்ளது. காரணம் படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்ப வல்லுநருக்கும் உரிய மரியாதையைப் பறிபோகிறது என்பதால்.
மேலும், விஜயின் கடைசி படத்தை நாம் அனைவரும் ஒன்றாக கூடி பெரிய திரையில் கொண்டாட வேண்டும் அல்லவா? எனவே அதை சரியான விதத்தில் பார்ப்போம், காத்திருப்போம். படம் சரியான நேரத்தில் வெளியாகும். பைரசியை ஊக்குவிக்க வேண்டாம். அப்போது தான் சினிமாவும், கலையும் உயிர் பிழைக்கும்.
அன்புடன்,
கலை. கலைஞர்கள். தொழில்நுட்ப வல்லுநர்கள்.
பூஜா ஹெக்டே
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே கூட இது குறித்து கண்டனம் தெரிவித்துவிட்டார். ஆனால், படத்தின் கதாநாயகனான விஜய் இன்னும் அமைதியாகவே இருக்கிறார். இந்த 'லீக்' குறித்து அவர் கண்டனம் தெரிவிப்பாரா, அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நடிகர்களுக்கு நன்றி தெரிவிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
சைபர் போலீசார் வழக்கு பதிவு
ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பாக படக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.