உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்திரிகையாளர், எடிட்டர், கமர்ஷியல் இயக்குனர் : இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் 91வது பிறந்தநாள்

பத்திரிகையாளர், எடிட்டர், கமர்ஷியல் இயக்குனர் : இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் 91வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் 90 வயதை கடந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே. அதில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இன்று அவர் தனது 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல வெற்றிகளை கொடுத்தாலும் இன்றும் எளிமையாக, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் அவரை பற்றி சில தகவல்கள்...

* இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. 1935 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை ராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்துராமனுக்கு செல்வமணி, சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு.

* சுப்பையா 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். மனைவி விசாலாட்சியும் அந்த காலத்திலேயே மேடைகளில் ஏறி சுயமரியாதை இயக்க கருத்துக்களை பேசியவர்.

* எஸ்.பி.முத்துராமன், பாலன் தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9வது வகுப்பு படிக்கும் போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார்.

* காரைக்குடிக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

1952ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜி கணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்துராமன், இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்'' என்று முடிவு செய்தார். அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

* எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் சென்னை புறப்பட்டார், முத்துராமன். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்துவிட்டார். இவரது ஆரம்ப பணி பத்திரிகை துறையில்தான். அதனால்தான் அவர் இன்றும் பத்திரிகையாளர்களை பெரிதும் மதிப்பார்.

* பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

* 1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக் கொடுத்தனர். எடிட்டராக சினிமாவில் பணியை தொடங்கியதால் சினிமா குறித்து ரகசியம் அவருக்கு சிறப்பாக தெரிந்தது. மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். அதில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

* இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

* இயக்குனர், கதாசிரியர் வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார்.

* தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் - சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது. இன்றைக்கும் வி.சி.குகநாதன் மீது எஸ்.பி.முத்துராமனுக்கு பாசம், மரியாதை அதிகம். சமீபத்தில் தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியவர், அதை அவரிடம் கொடுத்து ஆசி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

* ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, நெற்றிக்கண், கழுகு, ராணுவ வீரன், போக்கிரி ராஜா, பாயும் புலி, புதுக் கவிதை, அடுத்த வாரிசு, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்தர், மிஸ்டர் பாரத், மனிதன், வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் என ரஜினி நடித்த 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

* அதேபோல கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானவர், கமல் நடித்த மோகம் முப்பது வருஷம் படத்தை இயக்கினார். அதன்பிறகு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை, விஜயகாந்த் நடித்த தர்ம தேவதை, நல்லவன், சத்யராஜ் நடித்த உலகம் பிறந்தது எனக்காக, விக்ரம் நடித்த காவல் கீதம் என 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

* 1977ஆம் ஆண்டு ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, 1978 ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருதுகள் பெற்றார். 1980ம் ஆண்டு ஆறிலிருந்து அறுபது வரை படத்துக்கு தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார்.

* தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமல்ஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜனிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் கமர்ஷியல் திரை வாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

* இன்றைக்கும் ரஜினி மீது எஸ்.பி.முத்துராமனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அவரை பெயர் சொல்லி அழைக்கும் இயக்குனர்களின் இவரும் ஒருவர். அதேபோல் ரஜினிகாந்த்தும் தனது அனைத்து இல்ல விழா, நல்ல கெட்டதுகளில் இவரை அழைக்காமல் இருக்க மாட்டார். வெள்ளை உடையில் இருப்பது இவரின் சிறப்பு

* நான் இவ்வளவு பெரிய வெற்றி பெற என் யூனிட்தான். காரணம், எங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம். அந்த கூட்டணிக்குதான் வெற்றி கிடைத்தது. நீங்களும் கூட்டணியாக சினிமாவில் பணியாற்றுங்கள் என தான் பங்கு பெறும் மேடைகளில் பேசுவார் எஸ்.பி.முத்துராமன். சிறந்த பேச்சாளரும் கூட.

* அதேபோல் திருக்குறளை தனது பேச்சில் மறக்காமல் குறிப்பிடுவார். அந்த திருக்குறளுக்கு மறக்காமல் அர்த்தம் சொல்வார். துாய தமிழில் பேசுவார். எல்லாரையும் மரியாதையாக நடத்துவது, பேசுவது இவரின் வழக்கம். இவர் நாத்திக குடும்பத்தில் பிறந்தாலும், ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திராவை இயக்கினார். ரஜினியின் சூப்பர்ஹிட் படமான முரட்டுகாளை, கமலின் சகலகலா வல்லவன் இதெல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

* நான் சினிமாவில் வெற்றி பெற்றேன். ஆனால், குடும்ப வாழ்க்கையில் அது கிடைக்கவில்லை. நான் பிஸியாக இருந்த காலத்தில் என் மனைவி, குழந்தைகளை கவனிக்கவில்லை. என் மனைவி இறந்துவிட்டார். குடும்பமும் முக்கியம் என அறிவுரை கூறுவது இவரின் வழக்கம்.

* இவரின் உயிர் நண்பர்கள் ஏவி.எம்.சரவணன், திருலோகசந்தர். இவர்கள் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். சினிமாவை இயக்காவிட்டாலும், ஏவிஎம் ஸ்டூடியோவில் இவருக்கு தனி அறை கொடுத்தார் ஏவிஎம்.சரவணன். தங்கள் படங்களில் கவுரவம் கொடுத்தனர். ஏவி.எம் நிகழ்ச்சிகளில் ஈகோ பார்க்காமல் அனைவரையும் கவனிப்பார் எஸ்.பி.முத்துராமன்.

* சமீபத்தில் ஏவி.எம்.சரவணன் மறைந்தது இவருக்கு பெரிய இழப்பு. அதேபோல் அவருடன் பணியாற்றிய சில கலைஞர்கள் டெக்னீஷியன்கள் இறந்தது அவருக்கு வலியை ஏற்படுத்தியது.

* இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் மனைவி பெயர் கமலா. இவர்களுக்கு சுப்பையா என்கிற மகனும, மீனா நாச்சியப்பன், விசாலாட்சி முத்தையா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி காலமாகிவிட்டார்.

* இன்றைக்கும் தமிழ் சினிமாவில் பந்தா இல்லாத எளிமையான இயக்குனராக திகழ்கிறார் எஸ்.பி.முத்துராமன். அனைவரிடமும் மரியாதையாக பேசுவது, மரியாதையாக நடப்பது , மற்றவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்குவது, பாராட்டுவது, வாழ்த்துவது என இளைஞனராக நடை போடுகிறார் எஸ்.பி.முத்துராமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !