UPDATED : ஜூலை 04, 2026 02:54 PM
ADDED : ஜூலை 04, 2026 02:50 PM

ஈஷா சத்குருவின் சிந்தனை உருவாக்கத்தில், எழுத்தாளர் சுபா எழுதி வெளி வந்துள்ள நுால் 'கிருஷ்ண லீலா'. இந்த நுால் குறித்து பேராசிரியர் குருஞானாம்பிகா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனை குறும்புக் குழந்தையாக, ராதையின் காதலனாக, கீதையின் நாயகனாக, குருசேத்திர போரின் போது அறத்தின் பக்கம் நின்று சரியான வியூகம் வகுப்பவராக அறிந்து இருக்கிறோம்.
இந்த நுாலில் கிருஷ்ணனை இன்னும் பலவித பரிமாணங்களோடு அறிய முடிகிறது. கிருஷ்ணனைப் போல கருவில் உருவான நாள் முதல் சிக்கலான சூழ்நிலைகளை சந்தித்தவர்கள் யாருமில்லை.
கிருஷ்ணனுக்கு பல முகங்களும், பல பரிமாணங்களும் உண்டு. அவை எப்படி இருந்தாலும், பக்தர்கள் கிருஷ்ணரை தெய்வமாக தரிசித்து கொண்டாடியதை இந்த நுால் விளக்குகிறது. கிருஷ்ணனை உணர்ந்து கொள்ள உருகும் இதயம் வேண்டும்.
மதி மயங்கி நாம் உருக வேண்டுமென்றால், வாழ்க்கையில் கொஞ்சம் லீலையை கொண்டு வரவேண்டும். லீலை என்பது விளையாட்டு.
விளையாட்டுத் தனம் என்பது சிறுபிள்ளைத்தனம் அல்ல. மனம் முழுக்க அன்பு, நெஞ்சம் முழுக்க கனிவு, கள்ளம் கபடமற்ற பண்பு என்கிறது இந்நுால்.
தெய்வீகம் எல்லா உயிர்களுடனும், உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தவே கிருஷ்ணர் பல லீலைகளை செய்தார்.
கிருஷ்ணன் யாராலும் அடக்க முடியாததொரு குழந்தை. பரிதவிக்க வைக்கும் குறும்புக்காரன். மயக்கும் கீதத்தை இசைக்கும் புல்லாங்குழல் இசைஞன்.
தென்றலின் அசைவுகளுடன் நடனமாடுபவன். எவரையும் வசீகரிக்கும் காதலன். வீரமிக்க போர் வீரன். எதிரிகளே இல்லாமல் ஒழிப்பவன்.
சாதுர்யமான அரசியல்வாதி. அரசர்களை உருவாக்கி, அரியணையில் அமர்த்தும் ராஜதந்திரி, கசடுகள் அற்ற கண்ணியமான மனிதன்.
உன்னதமான யோகி, அவன் இல்லையென்றால் இவ்வுலகமில்லை என்று உணரச் செய்பவன். மாயக்கண்ணன் அவனே அவதார புருஷன் என்பதை இந்நுால் உணர்த்துகிறது.
