/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ராச்சேனஹள்ளி ஏரியில் பொழுதை போக்கலாமா?
/
ராச்சேனஹள்ளி ஏரியில் பொழுதை போக்கலாமா?
ADDED : ஜன 08, 2026 05:39 AM

- நமது நிருபர் -
பெங்களூரு ஹெப்பாலில் இருந்து கே.ஆர்.புரம் செல்லும் வெளிவட்ட சாலை வழியாக வாகனங்களில் செல்வோர், பரந்து விரிந்து காணப்படும் ராச்சேனஹள்ளி ஏரியின் அழகை கண்டு ரசிக்காமல் சென்றிருக்க மாட்டார்கள். மான்யதா டெக் பார்க் அருகில் அமைந்து உள்ள இந்த ஏரியை, மேம்பாலத்தில் வாகனத்தில் செல்லும் போது பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.
சுமார் 104 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் வெயில் காலத்தில் தண்ணீர் அளவு குறையாது. அதிகாலையில் சென்றால் ஏரியின் ஒரு பகுதியில் உள்ள கட்டடங்களின் பின்பக்கம் இருந்து, சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம். மாலையில் அங்கு பொழுது போக்க சென்றால், சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்தி சாயும் நேரத்தில் சில்லென வீசும் காற்றுக்கு நடுவில், ஏரி பகுதியில் நேரத்தை செலவழிப்பது புதிய அனுபவமாக இருக்கும்.
வாக்கிங் செல்வதற்கும், சைக்கிள் ஓட்டி செல்வதற்கும் ஏரிக்கரை பகுதி ஏற்ற இடமாக உள்ளது. அதிகாலை, மாலை நேரத்தில் பறவைகள் கூட்டம், கூட்டமாக பறந்து செல்வதையும், ஏரியின் இன்னொரு பக்கம் இருக்கும் கட்டடங்கள் தண்ணீருக்குள் தெரிவதையும் கேமராவில் கிளிக் செய்யும் வாய்ப்பு உண்டு.
தினமும் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஏரிக்கு செல்ல அனுமதி உள்ளது. குழந்தைகள் விளையாடவும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
வாகனங்களை நிறுத்தவும் இடம் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்சில் செல்வோர் தனிசந்திரா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஏரிக்கு செல்லலாம்.

