/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
லண்டன் டூ பெங்களூரு உணவகத்தில் சாதித்த நண்பர்கள்
/
லண்டன் டூ பெங்களூரு உணவகத்தில் சாதித்த நண்பர்கள்
ADDED : ஆக 30, 2025 11:11 PM

திறமையும், நம்பிக்கையும், பொறுமையும் சேர்ந்தால், வாழ்கையில் சாதிப்பது நிச்சயம் என்பதற்கு உதாரணமாக, இருவர் உள்ளனர். இதன் பிரதிபலனாக பெங்களூரில் 'லாஸ் டாக்கோஸ்' மெக்சிகன் உணவை கொண்டு வந்து சாதித்து உள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர்கள் ஈஸ்வர், பிரியா, 26. இருவரும் லண்டனுக்கு படிக்க சென்றனர். ஒரு தடவை ஈஸ்வரும், பிரியாவும் தங்கள் நண்பர்களுடன் அங்குள்ள 'மெக்சிகன்' உணவகத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பிட்டு முடித்த பின், மீதி உள்ள பரிடோஸ் என்ற ரக உணவை கவரில் 'பேக்' செய்தனர். அப்போது பிரியா, 'வாடிக்கையாளர்கள் இந்த மெக்சிகன் தெருவோர உணவை விரும்பி சாப்பிடுகின்றனர்' என்றார். அதற்கு ஈஸ்வர், இந்த உணவு வகையை 'நாம் ஏன் நம் நாட்டில் செய்ய கூடாது' என்று கேட்டார்.
இது தொடர்பாக இருவரும் தொடர்ந்து தினமும் பேசி வந்தனர். இதற்கான உணவகத்தை பெங்களூரில் எங்கு திறப்பது, உணவகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து பேசினர். ஒரு வழியாக, பெங்களூரில் உணவகம் திறக்க முடிவு செய்தனர்.
படிப்பு முடிந்து இருவரும் பெங்களூரு திரும்பினர். தங்கள் விருப்பத்தை, அவரவர் குடும்பத்தினரிடம் கூறினர். ஆனால், குடும்பத்தினரோ, இந்த யோசனையை விட்டு, விட்டு நல்ல வேலையில் சேரும்படி ஆலோசனை வழங்கினர். உங்களுக்கு வயது குறைவு; அனுபவம் இல்லை என விமர்சித்தனர்.
முதல் உணவகம் ஆனாலும், ஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்று எண்ணி, கடை நடத்துவதற்காக, தினமும் நகரின் பல பகுதிகளில் சுற்றினர். 2024 ஜூலையில், ஆர்.ஆர்., நகரில் தங்கள் முதல் உணவகத்தை திறப்பதற்கான இடத்தை முடிவு செய்தனர். ஏழு நாட்களில், 'லாஸ் டாக்கோஸ்' மெக்சிகன் கிரில் உணவகத்தை துவக்கினர்.
ஆரம்பத்தில் பணியில் சேர்ந்தவர்கள், திடீரென வேலையை விட்டு நின்று விடுவர். அப்பகுதியில் கன மழை பெய்தால் மழை வெள்ளம், கடைக்குள் புகுந்து விடும். வாடிக்கையாளர் வருகை குறைந்தது. மாத வாடகை கட்ட முடியாமல் தவித்தனர். ஒரு நாள் இரவு உணவகத்தில் உணவு குறைவாக இருந்தது. கடை ஊழியர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக, நண்பர்கள் இருவரும் சாப்பிடாமல் பட்டினி கிடந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இருந்தாலும் இருவரும் மனம் தளரவில்லை. லண்டனில் எங்களால் வசிக்க முடிந்தபோது, இதுவும் கடந்து போகும் என்று எண்ணத்தில் இருந்தனர். இவர்களின் பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்தது. உணவகத்தை சீரமைத்தனர். மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்தது.
2வது உணவகம் முதல் கடை ஆரம்பித்த எட்டு மாதங்களுக்குள் சந்திரா லே - அவுட்டில் தங்களின் இரண்டாவது கிளையை துவக்கினர். துவக்கிய முதல் நாளே 2,000க்கும் மேற்பட்டோர் வந்து சாப்பிட்டனர். இதனால், இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இரு கிளைகளிலும் தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர்.
மற்ற உணவகங்களை போன்று இல்லாமல், வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகனில் இருந்தே அதற்கான பொருட்களை வரவழைக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆன்லைன் செயலி மூலம் ஆர்டர் செய்து உணவு வாங்குவோரை பாசத்துடன் நடத்துகின்றனர்.
லண்டனுக்கு சென்று வருவோர், பல நினைவுகளை சுமந்து வருவர். ஆனால், இவர்களோ, லண்டனில் கண்ட கனவை, இங்கு நனவாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல விரும்புவோர் தொடர்புக்கு:- 99800 84978, 97311 85180
- நமது நிருபர் - .