ADDED : ஆக 24, 2025 12:40 AM
வாஷிங்டன்:'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பு, மரியாதை அளிப்பதற்கு பதில் அழுத்தம் தருவது, மிரட்டல் விடுப்பது' என தவறாக செயல்படுவதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறையில் உள்ள நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்துள்ளார். இது, இந்தியாவுக்கும் அமலாகியுள்ளது.
இது குறித்து, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளதாவது:
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இந்த உரசல் துரதிர்ஷ்டவசமானது. இது, எங்களுக்கு கவலையளிக்கிறது.
பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் நாங்கள் நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பு, மரியாதை என்ற கொள்கையை கடைப்பிடித்தோம். தற்போதைய டிரம்ப் அரசு அதிகாரம் செலுத்துதல், அழுத்தம் தருதல் என மிரட்டும் ரீதியில் நாடுகளை அணுகுகிறது.
இது போன்ற டிரம்பின் கொள்கையால், இந்தியா போன்ற நட்பு நாடுகள் நம்மிடமிருந்து அன்னியமாகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.