ஜாபர் சாதிக்கால் தமிழகத்துக்கு தலைகுனிவு: அ.தி.மு.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
ஜாபர் சாதிக்கால் தமிழகத்துக்கு தலைகுனிவு: அ.தி.மு.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 05:02 AM

சென்னை: 'தி.மு.க., அரசை கண்டித்து, வரும், 4ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் அலுவலகம் முன், அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வெளியான செய்தி, தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் கும்பலை, அந்த நாடுகளின் காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவும், இதற்காக இயங்கும் டில்லி சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டில்லியில் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த கும்பல் தலைவனாக செயல்பட்டவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும், அவரை போலீஸ் தேடுவது குறித்த செய்தி வந்த போது தான், தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
ஜாபர்சாதிக், முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்து, ஜாபர்சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவாகும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய டி.ஜி.பி., போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனோடு புகைப்படம் எடுத்திருப்பதை பார்க்கும் போது, தமிழக மக்களின் பாதுகாப்பு, அரசால் எந்த லட்சணத்தில் உள்ளது என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை.
இதற்கு காரணமான, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி அமைப்புகள் சார்பில், வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு, வருவாய் மாவட்டங்களில் உள்ள, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

