ADDED : டிச 24, 2025 06:48 AM

திருச்சி: 'ஜன., 6ம் தேதிக்குள், அரசு ஊழியர்களுக்கு, முதல்வர் நல்ல செய்தியை சொல்வார்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி: பொங்கல் பரிசுத் தொகுப்பில், 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து பரிசீலித்து, விரைவில் முதல்வர் இனிப்பான முடிவை அறிவிப்பார்.
ஜன., 6ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்க உள்ளதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தியபோதும், போராட்டம் நடத்துவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். எனவே, முதல்வர் ஜன., 6ம் தேதிக்குள், அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அறிவிப்பார்.
தி.மு.க.,வில் புதுரத்தம் பாய்ச்ச வேண்டும்; மூத்தவர்களின் ஆலோசனைகளும் தேவை என்ற அடிப்படையில்தான், துணை முதல்வர் உதயநிதி செயல்படுகிறார். நாங்கள் திராவிட மாடல் 2.O ல் கவனம் செலுத்தி வருகிறோம். பிற கட்சிகளைப் பற்றி கவலையில்லை. இவ்வாறு மகேஷ் கூறினார்.

