ADDED : ஆக 25, 2025 01:30 AM

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
தென்காசிமாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வட்டாலுார், ராமநாதபுரம் மேல தெருவைச் சேர்ந்த முருகன் 61. ஆலங்குளத்தில் தனியார் விடுதி வாட்ச்மேன். இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஒரு மகனைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த மகன் பாலசுப்பிரமணியன் 35, குற்றாலத்தில் சிப்ஸ் கடையில் வேலை செய்கிறார். இந்நிலையில் முருகன் அடிக்கடி குடிபோதையில் மனைவி, மருமகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி, இரண்டு நாட்களுக்கு முன் பூலாங்குளத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.
நேற்று இதுகுறித்து பாலசுப்பிரமணியன், தந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த அரிவாளால் தந்தை முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் பாவூர்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.