/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் ...கிடப்பில்:கானல் நீரானதாக காஞ்சி விவசாயிகள் வேதனை
/
தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் ...கிடப்பில்:கானல் நீரானதாக காஞ்சி விவசாயிகள் வேதனை
தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் ...கிடப்பில்:கானல் நீரானதாக காஞ்சி விவசாயிகள் வேதனை
தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் ...கிடப்பில்:கானல் நீரானதாக காஞ்சி விவசாயிகள் வேதனை
ADDED : ஆக 22, 2025 02:00 AM

காஞ்சிபுரம்,:தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் பற்றி தமிழக அரசு 14 ஆண்டுகளாக ஆராய்ந்தும், இணைப்பு திட்டம் இன்று வரை கிடப்பிலேயே இருப்பதாக, காஞ்சிபுரம் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பாயும் ஆறுகளில் தென்பெண்ணை ஆறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
உபரி வெள்ள நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் இன்று வரை செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளதாகவும் எப்போது செயல்படுத்துவார்கள் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரை முருகன் இத்திட்டம் பற்றி ஆராய்ந்து வருவதாகவும், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்து வருகிறார். ஆனால், திட்ட பணிகள் துவங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இரு ஆறுகளின் இணைப்பு திட்டம் பற்றி, கடந்த 14 ஆண்டுகளாக ஆராய்ந்தும் நடவடிக்கை இல்லை என, விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் செய்யாற்றையும், தென்பெண்ணை ஆற்றையும் இணைத்திருந்தால், திருவண்ணாமலை வழியாக, செய்யாற்றில் தண்ணீர் வந்திருக்கும். செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு வழியாக, பாலாற்றிலும் தண்ணீர் வந்திருக்கும் என, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
தென்பெண்ணையாற்றுக்கும், செய்யாற்றுக்கும் இடையே, 22 கி.மீ., கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்து விடலாம் என, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் செய்யாற்றுக்கும், தென்பெண்ணை ஆற்றுக்கும் 22 கி.மீ., இடைவெளி உள்ளது. இந்த பகுதியில், நில எடுப்பு செய்து, கால்வாய் வெட்ட வேண்டிய சூழல் உள்ளது.
இந்த 22 கி.மீ., கால்வாய் வாயிலாக, தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர், செய்யாறு வழியாக காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில், உத்திரமேரூர் அருகே கலக்கும். இந்த திட்டத்தை பல ஆண்டுகளாகவே விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த 14 ஆண்டுகளாக ஆராயப்படும் இத்திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, மூன்று மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.
2013-- 14ம் ஆண்டு, தமிழக அரசின் வரவு - செலவு அறிக்கையில் இத்திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள நில ஆர்ஜித சட்டத்தின்படி, மதிப்பீடு திருத்தி அமைக்கும் பணிகள் நடப்பதாக, 2013ல் அதிகாரிகள் பதில் கூறி வந்தனர்.
தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் பற்றி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2014ல், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது. ஆனால், இத்திட்ட பணிகள் அப்படியே உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியிலும், அதைத்தொடர்ந்து தி.மு.க., ஆட்சியிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்கின்றனர்.
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகளும், விவசாய சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒதுக்குவதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், அடுத்தகட்ட பணிகள் கூட நடக்கவில்லை. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இதன்வாயிலாக பலன் அடைவார்கள். விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, இரு ஆறுகளையும் இணைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.நேரு, மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.