ADDED : செப் 01, 2025 10:57 PM

புதுடில்லி: அடுத்த ஆண்டு டில்லியில், உலக பாட்மின்டன் தொடரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், 1977 முதல், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. சமீபத்தில் பாரிசில், 29வது சீசன் நடந்தது. இதன் 30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில் நடத்திட, பி.டபிள்யு.எப்., அனுமதி வழங்கியது. இதனையடுத்து 17 ஆண்டுகளுக்கு பின், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதற்கு முன் 2009ல் ஐதராபாத்தில் நடந்தது.
உலக பாட்மின்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு இதுவரை 15 பதக்கம் (ஒரு தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம்) கிடைத்துள்ளது. கடந்த 1983ல் இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே (வெண்கலம்) முதல் பதக்கம் வென்றார். 2019ல் இந்திய வீராங்கனை சிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய சிந்து ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 5 பதக்கம் வென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இத்தொடரின் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய நட்சத்திரங்களின் பதக்க வேட்டை தொடரலாம்.