இன்ஜினியரை கொலை செய்தது ஏன்? கட்டட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
இன்ஜினியரை கொலை செய்தது ஏன்? கட்டட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
ADDED : ஏப் 29, 2026 06:52 PM
பாகூர்: கள்ளக்காதாலை தொடர்ந்ததால் கடப்பாறையால் அடித்து கொலை செய்ததாக கட்டட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அருகே இன்ஜினியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கட்டட தொழிலாளி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:
எனது பெயர் வசந்தராஜா, 42; கொத்தனார் வேலை செய்து வருகிறேன். திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். எனது தம்பி சிவராஜியின் நண்பரான மணப்பட்டை சேர்ந்த இன்ஜினியர் மணிகண்டன்,35; எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றதில், மணிகண்டனுக்கும், எனது மனைவிக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
நான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வேலைக்காக திருப்பூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, எனது மனைவியும், மணிகண்டனும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து கேட்டபோது, எனக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது.
எனது மனைவி மன்னிப்பு கோரியதால், நானும் குடும்ப நலன் கருதி விட்டுவிட்டேன். கடந்த ஜனவரி 17ம் தேதி கரிநாள் அன்று இரவு 11 மணிக்கு நானும், எனது மகன்களும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தோம். அப்போது, என் மனைவி மணிகண்டனுக்கு போன் செய்து வரசொல்லி வீட்டின் வெளியே இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஆத்திரமடைந்த நான், மரக்கட்டையால், எனது மனைவியை அடித்தேன். உடன் எனது மகன், அவரது நண்பர்களை அழைத்து வந்து என்னை மரக்கட்டையால் அடித்து கையை உடைத்தார். அன்று முதல், நான் அதே பகுதியில் உள்ள எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன்.
எனது மனைவியின் செயலால் மனமுடைந்த நான் குடிக்கு அடிமையானேன். பத்து நாட்களுக்கு முன் காலையில் குடித்துவிட்டு, என் வீட்டிற்கு சென்று என் மனைவியை திட்டிவிட்டு, என் அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று மதியம், என் மனைவியும், என் மகனும் சேர்ந்து இரும்பு சுத்தியால் எனது கையில் அடித்தனர். அதில் படுகாயமடைந்தேன். மிகுந்த மன வேதனையில் இருந்த நான், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமான மணிகண்டனை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த சனிக்கிழமை மணிகண்டனுக்கு போன் செய்து, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீ ஊருக்கு வந்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தேன்.
கடந்த வாரம் திங்கள் கிழமை காலை மணிகண்டனின், யமாகா ஸ்கூட்டரை எடுத்துச் சென்று 5,000 ரூபாய்க்கு அடமானம் வைத்து, அந்த பணத்தில் மது வாங்கி குடித்து வந்தேன். இந்நிலையில், சென்னையில் இருந்து ஊர் திரும்பிய மணிகண்டனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தேன். நேற்று முன்தினம் விடியற்காலை 5:40 மணிக்கு அவரது பாட்டி வீட்டில் துாங்கி கொண்டிருந்த மணிகண்டனை தலையில், கடப்பாறையால் இரு முறை தாக்கினேன். அவர் கூச்சலிடவே. நான் வீட்டின் பின்புறமாக தப்பிச் சென்று ரோட்டு ஓரமாக நின்றிருந்த டாடா ஏஸ் வேன் அருகே கடப்பாறையை மறைத்து வைத்துவிட்டு, முள்ளோடையில் பதுங்கிய என்னை போலீசார் கைது செய்தனர்’ என்றார்.
