கரூரில் போட்டியிடுங்க: விஜய்க்கு கட்சியினர் அழுத்தம்
கரூரில் போட்டியிடுங்க: விஜய்க்கு கட்சியினர் அழுத்தம்
ADDED : அக் 23, 2025 06:20 AM

ஜோதிடர் அறிவுரைப்படி, 'வி' என துவங்கும் தொகுதி ஏதாவது ஒன்றில் போட்டியிட முடிவெடுத்திருந்த விஜய்க்கு, கரூர் த.வெ.க.,வினர் தங்கள் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளனர்.
கரூர் தொகுதி த.வெ.க., முன்னணி பிரமுகர் கூறியதாவது:
கரூருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த விஜயை பார்க்க ஏராளமான மக்கள் கூடினர். இதில் நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இதை வைத்து, அரசியல் கட்சியினர் விஜயை நோக்கி, கடும் விமர்சனங்களை வைத்தனர். ஆனால், 41 பேர் இறப்புக்கு விஜய் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என, கரூர் மக்கள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்தோர் கூறினர்.
நடந்த சம்பவங்களுக்கு பின், விஜய் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாகி இருக்கிறதே தவிர, அவர் மீது துளியும் வெறுப்போ; அதிருப்தியோ இல்லை. அதனால், கரூரில் தான் விஜய் போட்டியிட வேண்டும். இதை, கட்சியின் மூத்த தலைவர்கள் வாயிலாக விஜய்க்கு கொண்டு சென்று இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.