UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 08:45 AM

சேலம் :
அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாது பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 44 அரசு மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு பள்ளியிலும், 17 ஆசிரியர், 7 ஆசிரியரல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பள்ளிகள், 2016 - 17ல், திட்ட நிதியில் இருந்து, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனாலும், ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு, தனி தலைப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
ஆசிரியரல்லாத பணியாளர்களை பொறுத்தவரை, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இளநிலை உதவியாளர், நுாலகர், ஆய்வக உதவியாளருக்கு, 12,000; அலுவலக உதவியாளர், துாய்மை பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரருக்கு தலா, 10,000 ரூபாய் சம்பளம்.
ஆனால் மூன்று மாதங்களாக நிதி பற்றாக்குறையால், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. 'குறைந்த சம்பளம் வாங்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி, தடையின்றி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.