தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா, பிரிட்டனுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா, பிரிட்டனுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
ADDED : ஜூலை 24, 2025 09:41 PM

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் ஜோனாத்தன் ரெனால்ட் ஆகியோர் கையெழுத்து போட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள்
1.இந்திய தொழிற்சாலைகள் மற்றும் மக்கள், பிரிட்டனின் மருத்துவ சாதனங்கள், விமான உதிரி பாகங்கள் ஆகியவற்றை பெற முடியும். குறைந்த விலையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும்.
2. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை மீதான வரி 15 ல் இருந்து 3 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளதால் அவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி 110 ல் இருந்து 10 சதவீதமாக குறையும்.
3.தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, பிரிட்டன் நிறுவனங்கள், விஸ்கி மற்றும் அது சார்ந்த பானங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். விஸ்கி மீதான இறக்குமதி வரி 150ல் இருந்து உடனடியாக 75 சதவீதம் குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் குறைக்கப்படும்..
4. பொருட்கள் தயாரிப்பு தாண்டி, இந்தியர்கள் பிரிட்டனில் வாழ்வதை எளிதாக்குகிறது. அங்குள்ள 36 சேவை துறைகளை அவர்கள் பெற முடியும்.
5. பிரிட்டனில் அலுவலகம் இல்லாமல், 35 துறைகளில் 2 ஆண்டுகள் இந்திய வல்லுநர்கள் அங்கேயே பணியாற்ற முடியும். இதனால், 60 ஆயிரம் ஐடி வல்லுநர்கள் பயன்பெறுவார்கள் என வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் அதிகம் பயனடையும்.
6. பிரிட்டன் சமூக பாதுகாப்பு கட்டணத்தில், இந்திய வல்லுநர்களுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கிடைக்கும்.
7.பிரிட்டன் வேலைச் சந்தையில், செப்கள், யோகா ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் நுழைவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
பிரிட்டனுக்கு கிடைக்கும் பயன்
1. இந்திய வரிகளில் பெருமளவு சலுகை கிடைக்கும்.
2.பொது கொள்முதல் வாய்ப்புகளில் பங்கேற்க பிரிட்டன் வணிகத்துக்கு வாய்ப்பு.
3. 200 கோடிக்கு மேலான முக்கியமில்லாத அரசு டெண்டர்களில் பங்கேற்க பிரிட்டன் நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் டெண்டர்களில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.4.09 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
4.இந்த ஒப்பந்தம் மூலம் நேரடியாக 2,200 வேலைவாய்ப்புகள் பிரிட்டனில் உருவாகும்.
5.ஆண்டுதோறும் 2.2 பில்லியன் பவுண்ட்கள் (மொத்தம்) பிரிட்டன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
6.இந்தியாவில் தயாரான ஆடைகள், ஷூக்கள் மற்றும் உணவுப் பொரட்களை பிரிட்டன் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்.