உ.பி., சிறுமியை கேரளாவுக்கு கடத்தி மதமாற்றம் செய்த பயங்கரவாத கும்பல்
உ.பி., சிறுமியை கேரளாவுக்கு கடத்தி மதமாற்றம் செய்த பயங்கரவாத கும்பல்
ADDED : ஜூலை 01, 2025 02:42 AM

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலித் சிறுமி, கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, உ.பி., போலீசார் கூறியதாவது:
உ.பி.,யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் பூல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, தர்க் ஷா பானோ, 19, என்ற பெண், முகமது கைப் என்பவரின் உதவியுடன் மே 8ம் தேதி கடத்தி உள்ளார்.
பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட சிறுமியை முகமது கைப் அழைத்து சென்றதுடன், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
சிறுமியை தர்க் ஷா பானோவிடம் அவர் ஒப்படைத்தார். ரயிலில் சிறுமியுடன் டில்லி சென்ற தர்க்ஷா பானோ, பின் கேரளாவுக்கு சென்றார். அங்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களை, சிறுமிக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்கள் சிறுமிக்கு பண ஆசை காட்டியதுடன், மதம் மாறும்படி வற்புறுத்தினர்; மேலும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கிடையே, மகளை காணவில்லை என, பூல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
சமீபத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த சிறுமி, திருச்சூர் ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்தவர்களின் உதவியுடன், பெற்றோரை மொபைல் போனில் அழைத்து நடந்ததை கூறினார்.
இதையடுத்து, திருச்சூருக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியை நாங்கள் பத்திரமாக மீட்டு பிரயாக்ராஜுக்கு அழைத்து வந்தோம். அவர் அளித்த புகாரின்படி, தர்க் ஷா பானோ, முகமது கைப் ஆகியோரை கைது செய்தோம். இந்த நெட்வொர்க் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இதில் மேலும் பலர் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.