இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் அரியவகை கனிமங்கள்; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தகவல்
இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் அரியவகை கனிமங்கள்; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தகவல்
ADDED : ஜூலை 24, 2025 07:18 AM

புதுடில்லி: அரிய வகை கனிமங்கள் இறக்குமதிக்காக, பிரேசில் மற்றும் டொமினிகன் ரிபப்ளிக் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பேசி வருவதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதன் வாயிலாக இப்பிரிவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜாம்பியா உள்ளிட்ட சில நாடுகளுடனும், சர்வதேச எரிசக்தி அமைப்புடனும் இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டிடம் 85.20 லட்சம் டன் அளவுக்கு அரிய வகை கனிமங்களின் இருப்பு உள்ளதாக, பார்லி.,யில் அவர் தெரிவித்துள்ளார்.அரிய வகை கனிமங்களின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, இவற்றின் ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் உலகளவில் மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆந்திர பிரதேசம், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் எட்டு மாநிலங்களின் கடல் பகுதிகளை ஒட்டி, 72.30 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் உள்ளன. அதே போல குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கனமான பாறைகளில் 12.90 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் உள்ளன.
அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம், நாட்டின் கடலோர மற்றும் நதிக்கரை பகுதிகளில் அரிய வகை கனிமங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 18 டன் அளவிலான அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.