எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மோடியின் ஜப்பான் பயணம்
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மோடியின் ஜப்பான் பயணம்
UPDATED : ஆக 28, 2025 10:48 PM
ADDED : ஆக 28, 2025 10:13 PM

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் ஜப்பான் பயணம் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இது மோடி பிரதமராக ஜப்பானுக்கு மேற்கொள்ளும் எட்டாவது பயணமாகும். இப்பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் எதிர்காலம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது-.
மேலும், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தாண்டி, இந்தியாவின் எதிர்கால புல்லட் ரயில் திட்டங்களில் ஜப்பானின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பான் சென்றுள்ள மோடி, ஜப்பான் பிரதமருடன் 15வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடனான முதல் உச்சி மாநாடாகும்.மேலும், பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கு செல்லும் முதல் தனிப் பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டில், உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார்.
ஜப்பான் பயணத்தின் முக்கியத்துவம்
* மும்பை - ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம்
* இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதிலும், ஜப்பானின் 'ஷிங்கான்சென்' தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது
* அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களால், ஜப்பானுடனான உறவை வலுப்படுத்துவது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது
* இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது
* இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் கூட்டமைப்பான 'குவாட்' எதிர்காலம் குறித்து ஆலோசனை.
முக்கியத்துவம் பெறுகிறது ஷாங்காய் உச்சி மாநாடு
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, சீனாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு, வரும், 31 மற்றும் செப்.,1ல் நடக்கும் ஷாங்காய் உச்ச மாநாட்டில் பங்கேற்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனாவுக்கு அவர் பயணம் செய்கிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு பதற்றத்தால், சர்வதேச அரசியல் நிலவரம் மாறி வருகிறது. குறிப்பாக, சீனாவுடனான உறவு கடந்த சில மாதங்களில் மேம்பட்டுள்ளது. இதனால், மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார்.
அறிக்கை
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அடுத்த சில நாட்கள் ஜப்பான் மற்றும் சீனாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். ஜப்பானில், இந்தியா - ஜப்பான்இடையிலான 15வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், அந்நாட்டு பிரதமரை சந்திக்க உள்ளேன். இக்கூட்டத்தில் சிறப்பு பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும், பொருளாதார மற்றும் கலாசார தொடர்பை ஊக்குவிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளேன். தொடர்ந்து சென்டாய் நகர் சென்று செமி கண்டக்டர் ஆலையை பார்வையிட உள்ளேன்.
சீனாவில் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளேன். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள அமைப்பின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். மாநாட்டுக்கு இடையே, அதிபர்கள் ஷி ஜின்பிங், புடின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறினார்.