'நோ பார்க்கிங்'கில் அமைச்சர் கார் அள்ளிச்சென்ற போலீசார்
'நோ பார்க்கிங்'கில் அமைச்சர் கார் அள்ளிச்சென்ற போலீசார்
ADDED : ஆக 16, 2025 12:19 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், சட்டசபை வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில், 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வந்தது.
இறுதி நாளான நேற்று முன்தினம், கூட்டத் தொடரில் பங்கேற்க சட்ட சபைக்கு வந்த நிஷாத் கட்சி தலைவரும், மாநில மீன்வள துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத், தன் வெள்ளை நிற பார்ச்சூனர் காரை, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், சட்டசபை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சஞ்சய் நிஷாத்தின் காரை, கிரேன் வாயிலாக துாக்கிச் சென்றனர்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கூட்டத்தொடர் முடிந்து வந்த அமைச்சர், தன் காரை காணோம் என தேட, உரிய விசாரணைக்கு பின், போலீசார் காரை ஒப்படைத்தனர்.