எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்
எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்
ADDED : ஆக 25, 2025 08:35 PM

ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகளை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்' என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்ட அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். இந்த ஆமதாபாத் மண்ணிலிருந்து, எனது சிறு தொழில் முனைவோர், எனது சிறு கடைக்காரர் சகோதர சகோதரிகள், எனது விவசாய சகோதர சகோதரிகள், எனது கால்நடை வளர்ப்பு சகோதர சகோதரிகளுக்கு சொல்கிறேன்.
தீங்கு ஏற்படாது
உங்கள் நலன்கள் எனக்கு மிக முக்கியமானவை. சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எனது அரசாங்கம் ஒருபோதும் விடாது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.
விட்டு வைக்க மாட்டோம்!
பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழி வாங்கியது என்பதை உலகம் கண்டது. பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் பாதுகாப்பு படையினர் அழித்தார்கள்.
பாதுகாப்பான நகரம்
நாங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உள்ளே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். குஜராத்தில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன. நமது மாநிலம் உற்பத்தி மையமாக மாறியிருப்பதைக் கண்டு முழு குஜராத்தும் பெருமை கொள்கிறது. ஆமதாபாத் நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.