பெங்களூரு தனியார் நிதி நிறுவனத்தின் ரூ.49 கோடியை அபகரித்த 'ஹேக்கர்'கள்
பெங்களூரு தனியார் நிதி நிறுவனத்தின் ரூ.49 கோடியை அபகரித்த 'ஹேக்கர்'கள்
ADDED : அக் 28, 2025 07:07 AM

பெங்களூரு: பெங்களூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை, 'ஹேக்' செய்து, 49 கோடி ரூபாய் அபகரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நே ற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் உள்ள 'விஸ்டம்' என்ற தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகளை, ஆகஸ்ட் 7ம் தேதி சைபர் குற்றவாளிகள் சிலர் 'ஹேக்' செய்துள்ளனர். அவற்றில் இருந்த 49 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நிதி நிறுவன மேலாளர் பிரகாஷ், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணையில், சைபர் குற்றவாளிகள் வெளிநாட்டில் இருந்து வி.பி.என்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிதி நிறுவனத்தின் கோடக் மஹிந்திரா மற்றும் ஐ.டி.எப்.சி., என இரண்டு வங்கி கணக்குகளில் இருந்து, மூன்று மணி நேரத்தில் 49 கோடி ரூபாயை, 600க்கும் மேற்பட்ட போலியான கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.
தொடர் விசாரணையில், மோசடியில் தொடர்புள்ள பெலகாவியின் இஸ்மாயில் ரஷீத் அத்தர், 27, ராஜஸ்தானின் சஞ்சய் படேல், 43, ஆகியோரை கைது செய்தனர்.
சஞ்சய் படேல், எட்டாம் வகுப்பு படித்தவர்; பிளம்பராக பணியாற்றுகிறார். இஸ்மாயில் ரஷீத் அத்தர், 10ம் வகுப்பு படித்தவர்; டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணி செய்கிறார்.
இவர்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்தாலும், சைபர் மோசடியில் நிபுணர்கள். இவர்கள் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹேக்கர்கள் உதவியுடன், நிதி நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
இந்த பணத்தில் 27.39 லட்சம் ரூபாயை, நேரடியாக ஒருவரின் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இதை கண்டுபிடித்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பொதுமக்கள் சிலரின் வங்கி கணக்குகளுக்கும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கமிஷன் கொடுத்து, பணத்தை எடுத்துள்ளனர். அனைத்து பணத்தையும் ஹவாலா வழியிலும், 'கிரிப்டோ கரன்சி' மூலமாக வெளிநாட்டுக்கும் அனுப்பியுள்ளனர். மோசடி குறித்து மேலும் விசாரணை நடக்கிறது.
தனியார் நிதி நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தற்போது இஸ்மாயில் கணக்கில் இருந்த 10 கோடி ரூபாயை, போலீசார் முடக்கியுள்ளனர். சைபர் குற்றங்கள் அதிகரிப்பதால், பொது மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

