'டிஜிட்டல் இந்தியா'வில் புதிய வசதி: யு.பி.ஐ.,யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!
'டிஜிட்டல் இந்தியா'வில் புதிய வசதி: யு.பி.ஐ.,யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!
ADDED : செப் 17, 2025 12:17 PM

புதுடில்லி: நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஆன்லைனில் பணம் அனுப்ப நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.
தற்போதைய காலத்தில், யுபிஐ பண பரிவர்த்தனைகள் அதிகம் நடந்து வருகிறது. மாதம் தோறும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், தனிநபரிடம் இருந்து வணிகருக்கான பி 2 எம் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும், பி 2 பி எனப்படும் தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
* காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
* கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.6 லட்சமாகவும், கடன் மாதத் தவணைகள், சுற்றுலா, இஎம்ஐ உள்ளிட்டவற்றிக்கு பணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பரிவர்த்தனையில் ரூ.5 லட்சமும், 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சமும் பணம் செலுத்தலாம்.
* நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம்.
* வங்கியில் டிபாசிட் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
* தனிநபர்களுக்குள் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ஒரு லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.