விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; மும்பையில் ரூ. 474 கோடிக்கு இன்சூரன்ஸ்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; மும்பையில் ரூ. 474 கோடிக்கு இன்சூரன்ஸ்
UPDATED : ஆக 21, 2025 10:39 AM
ADDED : ஆக 21, 2025 10:22 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு, இந்த ஆண்டு பண்டிகைக்காக ரூ.474 கோடியில் இன்சூரன்ஸ் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்த நிலையில், இந்த ஆண்டு தொகை சற்று அதிகரித்துள்ளது.
விநாயகர் சிலைகளைஅலங்கரிக்கும் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு உயர்வு, அதிக தன்னார்வலர்கள்,பூசாரிகள், சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த 'ஆல்-ரிஸ்க்' இன்சூரன்ஸ் திட்டமானது, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள கற்கள், தனிப்பட்ட விபத்துக் காப்பீடு, தீ மற்றும் பூகம்பப் பேரிடர் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஆபரணங்களுக்கான 'ஆல்-ரிஸ்க்' காப்பீட்டு மட்டுமே இந்த ஆண்டு ரூ. 67 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024ல் ரூ. 43 கோடியாகவும், 2023ல் ரூ. 38 கோடியாகவும் இருந்தது. இதில் 375 கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு தொடர்புடையது. இதில் பூசாரிகள், பக்தர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் அடங்குவர். பொதுமக்களுக்கான சொத்து காப்பீடு 30 கோடி ரூபாய்.
ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், 'தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு உயர்வே இதற்கு முக்கிய காரணம். தன்னார்வலர்கள் மற்றும் பூசாரிகளும் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றார்.