ADDED : செப் 01, 2025 11:50 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி ஆசிரியர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு சக்காந்தரை கைகுத்திபரம்பு பகுதியை சேர்ந்த விபின் மனைவி ஆன்சி, 35. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்றார்.
அப்போது, கஞ்சிக்கோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம், ஸ்கூட்டரில் மோதியது. இதில், கட்டுப்பாட்டு இழந்த ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில், ஆன்சியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
ரோட்டில் மயங்கி கிடந்த அவரை, வாளையார் போலீசார் மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.