'செஞ்சுரி சைக்கிளிஸ்ட்' அனில் கட்சூர் திடீர் மரணம்
'செஞ்சுரி சைக்கிளிஸ்ட்' அனில் கட்சூர் திடீர் மரணம்
ADDED : பிப் 04, 2024 11:15 PM

பெங்களூரு: பெங்களூரின் புகழ் பெற்ற உடற் பயிற்சி ஆலோசகரும், பலரை ஊக்கப்படுத்திய சைக்கிள் ஓட்டுனர், 'செஞ்சுரி சைக்கிளிஸ்ட்' அனில் கட்சூர், மாரடைப்பால் மரணமடைந்தார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் அனில் கட்சூர், 45. உடற் பயிற்சி ஆலோசகராகவும், சைக்கிளில் சென்றும், அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்தும் சமூக வலைதளங்களில் விளக்கி வந்தார். நகரில் பலருக்கும் சைக்கிள் ஓட்டுவதில் 'ரோல் மாடலாக' திகழ்ந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிள் ஓட்டி வந்தார்.
சைக்கிளில் செல்லும் அறிமுகம் இல்லாதவரிடம் தாமாக சென்று அவர்களுடன் சகஜமாக பேசி, நட்பாகும் குணம் கொண்டவர். இவருக்கு நெருக்கமானவர்கள், இவரை 'துரோணாச்சார்யா' என்று அழைப்பர்.
கடந்த 2022 ஆகஸ்டில், 'சைக்கிள் கிளப்' தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் 100 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டியில் பலர் பங்கேற்றும், அவர்களால் தொடர்ந்து 10 நாட்கள், 100 கி.மீ., ஓட்ட முடியவில்லை.
ஆனால், அனில் கட்சூர், இதை சவாலாக ஏற்று, பத்து நாட்களுக்கு தினமும் 100 கி.மீ., சைக்கிளில் பயணித்து பரிசு பெற்றார். அன்று முதல் இவரை, 'செஞ்சுரி ரைடர்' என்று பட்டப்பெயர் வைத்து அழைக்க துவக்கினர்.
இதனால் ஊடகத்தின் கவனம் அவரிடம் திரும்பியது.
இது குறித்து அப்போது அவர் கூறுகையில், தினமும் அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து, 3:00 மணிக்கு சைக்கிள் ஓட்ட துவங்குவேன். பெங்களூரு தெற்கு பகுதியில் 100 கி.மீ., ஓட்டி, காலை 7:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பி விடுவேன். தினமும் 100 கி.மீ., சைக்கிளில் சென்று உடற்பயிற்சி செய்து வந்தேன். இதுபோன்று கடந்த 42 மாதங்களாக, 1,250 முறை பயணித்து உள்ளேன்' என்றார்.
இந்நிலையில், இவர் ஜன., 31ம் தேதி 100 கி.மீ., சைக்கிள் பயணம் செய்து வந்ததை, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பிப்., 1ம் தேதி இரவு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பிப்., 2ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சைக்கிள் ஓட்டுவோருக்கு 'ரோல் மாடலாக' இருந்த அனில் கட்சூர் மறைவு, பேரிடியாக அமைந்துள்ளது.

