பார்த்தசாரதி கோவிலில் மலர் அலங்காரம்; ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்கு
பார்த்தசாரதி கோவிலில் மலர் அலங்காரம்; ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்கு
ADDED : செப் 07, 2025 06:44 AM

கொல்லம்: கேரளாவில், ஓணம் பண்டிகையையொட்டி பார்த்தசாரதி கோவிலில் மலர் அலங்காரம் செய்ததாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள முத்துபிலாக்காடு என்ற இடத்தில், பார்த்தசாரதி கோவில் உள்ளது.
இந்த கோவிலில், திருவிழாக்களின் போது கட்சிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கோவிலில் மலர் அலங்காரம் செய்யவும், அதன் அருகே பேனர்கள், கொடிக்கம்பங்களை நிறுவவும் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் 2023ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில், பார்த்தசாரதி கோவிலை சுற்றி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது, கோவிலுக்கு செல்லும் பிரதான பாதையில், மலர்களால் ஆர்.எஸ்.எஸ்., கொடி வரையப்பட்டிருந்தது. மேலும், கோவிலில் இருந்து 50 மீட்டர் துாரத்தில், சத்ரபதி சிவாஜியின் பேனரும் வைக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பார்த்தசாரதி கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மலர் அலங்காரம் செய்ததாக, அந்த கோவிலின் அலுவலகப் பொறு ப்பாளர் அசோகன், போலீசில் புகார் அளித்தார். இதன்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 27 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.