கார்கே சர்ச்சை பேச்சால் காங்.,குக்கு தர்மசங்கடம்
கார்கே சர்ச்சை பேச்சால் காங்.,குக்கு தர்மசங்கடம்
ADDED : ஏப் 09, 2026 02:07 AM

பெங்களூரு: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சைக்குரிய பேச்சால், கட்சி தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.
அரசியல் என்றால் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவது வழக்கம். ஆனால் சிலர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக அரசியல் அனுபவம் மிக்க தலைவர்களே, நாக்கை கட்டுப்படுத்தாமல் மற்றொரு கட்சிகளின் தலைவர்களை விமர்சிக்கின்றனர்.
சமீப நாட்களாக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு, சர்ச்சைக்கு காரணமாகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன் கேரளாவின் இடுக்கியில் உரையாற்றிய கார்கே, 'குஜராத் மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே இவர்களை பிரதமர் நரேந்திர மோடி, எளிதாக திசை மாற்றலாம்.
ஆனால் கேரள மக்கள் படித்தவர்கள். அறிவாளிகள். அவர்களை ஏமாற்ற முடியாது' என கூறினார். இது சர்ச்சைக்கு காரணமானது. பலரும் இவரை கண்டித்தனர்.
அதன்பின் அசாமின், நிலாம்பஜாரில் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, 'குரானில் நமாஸ் செய்யும் போது, விஷப்பாம்பை கண்டால் கொல்ல வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வும் கூட விஷப்பாம்புகள். இவற்றை கொல்லாவிட்டால், நீங்கள் பிழைக்க முடியாது' என்றார். இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதன்பின் விழித்து கொண்ட கார்கே, 'குஜராத்திகள் படிக்காதவர்கள் என, கூறியதற்கு மன்னிப்பு கேட்டார், குஜராத்திகளின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம், எனக்கு இல்லை. அவர்கள் மீது எனக்கு கவுரவம் உள்ளது. அது எப்போதும் இருக்கும்' என, கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே, இதுபோன்று சர்ச்சை கருத்துகளை கூறுவது, இது முதன் முறை அல்ல. 2023ல் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில், காங்., பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'பிரதமர் நரேந்திர மோடி, விஷப்பாம்பை போன்றவர். விஷப்பாம்பை தொட்டால், செத்து போவார்கள். நாட்டுக்கு பா.ஜ.,வின் பங்களிப்பு என்ன. அவர்களின் வீட்டில் நாட்டுக்காக ஒரு நாயும் சாகவில்லை' என கூறியிருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்த பிரதமர், 'நான் சிவனின் கழுத்தில் சர்ப்பமாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்தார். இப்போதும் கார்கே அந்தந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தலில், சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்.
