ADDED : ஏப் 09, 2026 02:06 AM

கலபுரகி: கலபுரகியில் நடந்த கோவில் தேரோட்டத்தின் போது கீழே விழுந்தவர் மீது தேர் சக்கரம் ஏறியதில், அவர் உயிரிழந்தார்.
கலபுரகி மாவட்டம், ஜுவர்கி தாலுகாவின் அரஹூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஸ்ரீ சரணபசவேஸ்வரர் தேரோட்ட திருவிழா நடந்தது.
இந்த தேரோட்டத்தை காண, பல கிராமங்களை சேர்ந்தோர் வந்திருந்தனர்.
அன்று மாலை தேரோட்டம் கோலாகலத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வாழ்த்து கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
பக்தர்கள் கூட்டத்தில், வினோத் ரெட்டி, 49, என்பவர் கீழே விழுந்தார். அப்போது தேரின் சக்கரம், அவரின் தொடையில் ஏறியது. இதில் தொடை பிளந்து, ரத்தம் வெளியேறியது.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.
திருவிழாவின் போது துயரமான சம்பவம் நடந்ததால், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். பரஹாதாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
